முட்டை பிரியர்களை குஷியாக்கும் முட்டை தக்காளி குருமா... பண்ணலாமா?
பொதுவாகவே ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த முட்டை பல்வேறு வகைகளிலும் சமைக்கக்கூடிய ஒரு எளிமையான உணவுப்பொருள் என்பதுடன் புரதத்தின் மிகச்சிறந்த மூலமாகவும் திகழ்கின்றது.
வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில், அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில், குறிப்பாக முட்டை பிரியர்களை குஷியாக்கக்கூடிய முட்டை முட்டை தக்காளி குருமா எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
எண்ணெய் - 3 தே.கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
பெரிய வெங்காயம் -1 நறுக்கியது
தக்காளி - 4
மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 3 கீறியது
இஞ்சி-பூண்டு விழுது -தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
தனியா தூள் - 1 தே.கரண்டி
மிளகாய் தூள் - ஒன்றரை தே.கரண்டி
முட்டைகள் - 4
தண்ணீர் - 1/2 லிட்டர்
மிளகுத் தூள் - 1/2 தே.கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி இலை - சிறிதளவு

செய்முறை
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, கடுகு மற்றும் சீரகம் சேர்த்துப் பொரிய விட வேண்டும்.
பின்னர் கடுகு பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், உப்பு மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து, வெங்காயம் மென்மையாகும் வரையில் வதக்கி எடுத்துக்காள்ள வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமானதும், இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும். பின்னர் இஞ்சி-பூண்டு பேஸ்டை சேர்த்து பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளி, கீறிய பச்சை மிளகாய்கள் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து தக்காளி விழுதில் கொத்தமல்லித் தூள் மற்றும் மிளகாய்த் தூளைச் சேர்த்து இதில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி, பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து உயர் தீயில் வேகவிட வேண்டும்.

அதனையடுத்து குழம்பில் நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றி, கிளறாமல், தீயை மிதமான அளவிற்கு குறைத்து, முட்டை முழுமையாக வேகும் வகையில் 10 நிமிடங்களுக்கு அப்படியே விடவேண்டும்.
கடைசியில் மிளகுத்தூள் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து மெதுவாக கலந்துவிட்டு எடுத்தால், அவ்வளவு தான் நாவூரும் சுலையில் முட்டை தக்காளி குருமா தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |