செல்வமகள் சேமிப்பு திட்டம்.., மாதம் ரூ.3,000 சேமித்தால் எவ்வளவு கிடைக்கும்?
பெண் குழந்தைகளின் எதிர்கால நிதி தேவைகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் முக்கியமான சிறுசேமிப்புத் திட்டங்களில் ஒன்று செல்வமகள் சேமிப்புத் திட்டம்.
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.250 முதல் முதலீடு செய்யலாம்.
ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். தற்போது இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையின் பெயரில் இந்தக் கணக்கைத் தொடங்கலாம்.

கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகள் வரை பணம் செலுத்த வேண்டும். ஆனால், கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகே கணக்கு முதிர்வடையும்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு பணம் செலுத்த வேண்டியதில்லை என்றாலும், கணக்கில் விதிகளின்படி வட்டி தொடர்ந்து சேரும்.
பெண் குழந்தையின் உயர்கல்வி போன்ற தேவைகளுக்காக இத்திட்டத்தின் விதிகளின்படி குறிப்பிட்ட அளவு தொகையைப் பெறலாம்.
செல்வமகள் சேமிப்புத் திட்டம் EEE வகையைச் சேர்ந்த சேமிப்புத் திட்டமாகும்.

இத்திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80Cன் கீழ், விதிகளுக்கு உட்பட்டு வரிச்சலுகை கிடைக்கும்.
மேலும், கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வுத் தொகைக்கும் வரி விலக்கு உள்ளது.
இத்திட்டத்தில், மாதம் ரூ.3,000 வீதம் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் மொத்தம் ரூ.5.40 லட்சம் முதலீடு செய்யப்படும்.
இந்தத் தொகை 21 ஆண்டுகளில் சுமார் ரூ.17.23 லட்சமாக மாறும். இதில் சுமார் ரூ.11.83 லட்சம் வட்டியாக கிடைக்கும்.