கால்சியம் குறைவால் எலும்பு தேய்மானமா? நிரந்தரவு தீர்வு அளிக்கும் கேழ்வரகு இட்லி
இன்றைய மேற்கத்திய உணவு கலாசாரத்தில், பெரும்பாலான உணவு வகைகளில் சத்துக்கள் நிறைந்ததாக இருப்பதில்லை. கால்சியம் சத்து குறைப்பாட்டால், முதுகு வலி, மூட்டு வலி, எலும்பு அரிப்பு, நகம், பற்கள் என பாதிப்புகள் உருவாகும்.
இதனால் எலும்பு தேய்மானம் என்பது மிக விரைவாகவே வந்து விடுகிறது. குறிப்பாக ஆண்களை காட்டிலும், பெண்கள் தான் கால்சியம் சத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
கால்சியம் சத்து தசையை இயக்குவதற்கும், நரம்பு மண்டலம் செய்தியை மூளைக்கு எடுத்துச் செல்வதற்கும் அவசியம். அப்படியாக, கால்சியம் குறைபாட்டை நீக்கக்கூடிய அற்புதமான சக்தி கேழ்வரகிற்கு உண்டு.
எனவே, கால்சியம் சத்து நிறைந்த இந்த கேழ்வரகை வைத்து விதவிதமான உணவு பண்டங்கள் செய்து சாப்பிடலாம். நாம் தற்போது கால்சியம் சத்து நிறைந்துள்ள கேழ்வரகு இட்லி ரெசிபி செய்முறை விளக்கம் பற்றி தெரிந்து வைத்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு – 1 கப்
வெந்தயம் – ஒரு டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
இட்லி அரிசி – 1/2 கப்
உளுந்து – 1/2 கப்
வெந்தயம் - ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு கப் அளவிற்கு கேழ்வரகு எடுத்து ஒரு ஈரமில்லாத பாத்திரத்தில் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு, இதனுடன் நீங்கள் இட்லி அரிசியை 1/2 கப் அளவு சேர்த்துக் கொள்ளுங்கள்.
அதனுடன், உளுந்து 1/2 கப் அளவிற்கு சேர்த்து, அவற்றுடன் வெந்தயம் ஒரு டேபிள் ஸ்பூன் போட்டு நான்கு முறை தண்ணீரில் நன்றாகக் கழுவி கொள்ளுங்கள். பிறகு சுத்தமான தண்ணீர் ஊற்றி குறைந்தபட்சம் 5 மணி நேரம் ஊற விட்டு விடுங்கள்.
ஐந்து மணி நேரத்திற்கு பிறகு இட்லி மாவு பதத்திற்கு கிரைண்டரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து குறைந்தது ஆறு மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.
இந்த மாவை ஒரு இட்லி பாத்திரத்தில் இட்லி அவிப்பது போல ஊற்றி வேக வையுங்கள். ஆனால், ஒரு கண்டிஷன் இதில் ராகி சேர்க்கப்பட்டுள்ளதால் 15 முதல் 20 நிமிடம் வரை நன்கு அவிக்க வேண்டும்.
இதில், தண்ணீர் சேர்த்து மொறு மொறு தோசையும் செய்யலாம். இவற்றுடன் காரசாரமான சட்னி சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.