மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய விஜயகாந்த்! கால்விரல்கள் அகற்றப்பட்டவரின் தற்போதைய நிலை
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இரண்டு வாரங்கள் மருத்துவமனை சிகிச்சை பின்பு இன்று வீடு திரும்பியுள்ளார்.
மருத்துவமனையில் விஜயகாந்த்
உடல்நல குறைவு காரணமாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே கட்சி நடவடிக்கைகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காமல் இருந்து வருகிறார். கட்சி பணிகளை அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கவனித்து வருகிறார்.
பெரும்பாலும் வீட்டிலேயே ஓய்வில் இருக்கும் விஜயகாந்த், உடல் பரிசோதனைக்காக அவ்வபோது மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி கடந்த 14 ஆம் தேதி சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
வழக்கமாக மேற்கொள்ளும் உடல் பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாதவும், சிகிச்சை முடிந்து ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக தலைமை கழகம் அறிவித்திருந்தது.
அகற்றப்பட்ட விரல்கள்
இந்த நிலையில், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவ நோய் காரணமாக விஜயகாந்தின் வலது காலில் மூன்று விரல்கள் அகற்றப்பட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன் வெளியானது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்களுக்கு சற்று ஆறுதல் தரும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்த் இன்று வீடு திரும்பியுள்ளார் என்று தேமுதிக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.
மருத்துவர்களின் அறிவுறுத்தல்படி வீட்டிலேயே அவர் தேவையான மருந்து, மாத்திரைகள் மற்றும் தேவைப்படும் பட்சத்தில் சிகிச்சையும் எடுத்துக் கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.