விஜயகாந்த் கால் விரல்கள் அகற்றம்! சர்க்கரை நோயாளிகளின் முக்கிய கவனத்திற்கு
சர்க்கரை நோய் வந்துவிட்டாலே கால்களை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என பலரும் அறிவுரை சொல்லக் கேள்விப்பட்டிருப்போம், ஏன் மருத்துவர்கள் கூட கால்கள் மீது அதீத கவனம் செலுத்துங்கள் என்றெல்லாம் கூறுவார்கள்!!
இது ஏன்? எதனால்? சர்க்கரை நோயாளிகள் கால்களை பத்திரமாக பார்த்துக் கொள்வது எப்படி? எதை செய்யலாம்? எதை செய்யக்கூடாது? என பல கேள்விகளுக்கு இந்த பதிவில் விடை காணலாம்.
சர்க்கரை நோய் வருவது ஏன்?
நம்முடைய உடலானது தேவையான அளவு இன்சுலினை உற்பத்தி செய்யாத நிலையிலோ அல்லது உற்பத்தி செய்த இன்சுலினை பயன்படுத்த இயலாத நிலையிலோ இருந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடும்.
இதையே சர்க்கரை நோய் என்கிறோம், இது ஒரு குறைபாடே தவிர, நோயல்ல, ஆரம்ப கட்டத்தில் இதை கவனிக்காமல்விட்டுவிட்டால், மாரடைப்பு, பக்கவாதம், பார்வை இழப்பு, சிறுநீரக செயலிழப்பு மற்றும் காலைத் துண்டிக்கும் அளவுக்கு பெரிய பிரச்சனைகள் ஏற்படுத்தி விடும்.
சர்க்கரை நோய் அறிகுறிகள்
- மிகவும் தாகமாக உணர்வது.
- வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழித்தல், குறிப்பாக இரவு நேரங்களில்.
- மிகவும் சோர்வாக உணர்வது.
- முயற்சி செய்யாமல் உடல் எடை குறைதல்.
- வாய்ப்புண் அடிக்கடி ஏற்படுதல்
- மங்கலான பார்வை.
- குணமடையாத வெட்டு காயங்கள் மற்றும் ரத்த காயங்கள்
கால்கள் கவனம் தேவை ஏன்?
பொதுவாக சர்க்கரை நோயாளிகள் கால்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் புண்கள் எளிதில் குணமாகாது.
இதற்கு காரணம் சர்க்கரை நோயாளிகளின் கால்கள் மரத்துப் போகும், நரம்புகள் செயல் இழந்து போவதால் கால்களின் உணர்திறன் படிப்படியாக குறைந்துவிடும்.
இதனால் ஆணி, முள் குத்தினால் கூட தெரியாது, வலி ஏற்பட்டாலும் அதை உணர முடியாது, இதனால் புண்ணில் அழுத்தம் கொடுத்து கொடுத்து பெரிதாகிவிடும்.
இதுதவிர ரத்தக்குழாய்கள் சுருங்கிவிடுவதால் கால்களில் போதியளவு ரத்தம் செல்லாமல் புண்கள் ஆறுவதற்கு தேவையான ஆக்சிஜன் அளவு கிடைக்காமல் போகும்.
எனவே சர்க்கரையின் அளவை சரியான அளவில் பார்த்துக் கொள்வதுடன் புண்கள் ஏற்படாமலும் கவனமுடன் பார்ப்பது அவசியம்.
புண்களை ஆற்றுவது எப்படி?
முதலில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்.
அதன்பிறகு அறுவை சிகிச்சை மூலம் காயத்தின் உள்பகுதியில் பாதிக்கப்பட்டிருக்கும் திசுக்களை வெளியேற்றிவிட்டு, கொலாஜன் புரதம் செலுத்தப்பட்டு புண்கள் ஆற சிகிச்சை அளிக்கப்படும்.
சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எப்படி?
ஆரோக்கியமான உணவு மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை மூலம் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம்.
பதப்படுத்தப்பட்ட சர்க்கரை உணவுகள், பானங்களை கட்டாயம் தவிர்த்து விடுங்கள், இதேபோன்று சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் தானியங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
மிக முக்கியமான வெள்ளை நிற உணவுகளுக்கு நோ சொல்லி விடுங்கள்.
ஆரோக்கியமான உணவுகளான காய்கறிகள், பழங்கள், பீன்ஸ் மற்றும் முழு தானியங்கள், சீரான உடற்பயிற்சி, பசிக்கும் போது புசிப்பது என வாழ்க்கை முறைகளில் மாற்றத்தை கொண்டு வாருங்கள்.
கால்களை எப்படிப் பராமரிப்பது?
* மருத்துவர்களின் ஆலோசனைப்படி உணவு எடுத்துக்கொள்வதுடன் சர்க்கரையின் அளவை அடிக்கடி பரிசோதிப்பது அவசியம். காலில் உணர்ச்சி இருக்கிறதா என தினமும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
* தினமும் தூங்கச் செல்லும் முன் சூடான நீர் கொண்டு கால்களை கழுவுங்கள், அப்படி கால் கழுவும்போது, காலில் அடிபட்டிருக்கிறதா? புண், காயங்கள், சிராய்ப்புகள் காணப்படுகிறதா? தடித்திருக்கிறதா? என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
* கால் வறண்டு போகாமல் பார்த்துக்கொள்வதுடன், மருத்துவர் ஆலோசனையுடன் லோஷன், க்ரீம் பயன்படுத்துவது நல்லது.
* நம் கை மற்றும் முகங்களை எவ்வாறு சுத்தமாக வைத்துக் கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு பாதத்தையும் காலையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.
* காலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது அவசியம். உட்காரும்போது கால்களை நீட்டி உட்கார்வது, காலுக்கான தனிப்பயிற்சிகள் செய்வது அவசியம்.
* உடல் எடையைச் சரியாகப் பேணுவதும் பாதப் பராமரிப்பும் பொருத்தமான காலணிகள் அணிவதும் முக்கியம்.
* பாதத்தின் எந்தப் பகுதியில் பாதிப்பு உள்ளதோ அந்த பகுதியில் அதிக அழுத்தம் செலுத்தாமல் இருப்பது நல்லது. அதற்கு தகுந்த காலணிகளை(Customized footware) பயன்படுத்த வேண்டும்.
* வருடத்துக்கு ஒருமுறை ‘பயோதிசியோமெட்ரி' (Biothesiometry) என்னும் பாதப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.