போக்குவரத்து சிக்னல் இல்லாத நாடு எதுன்னு தெரியுமா? வித்தியாசமான போக்குவரத்து ரகசியம்!
உலகில் இந்த நாட்டில் போக்குவரத்து சிக்னலே இல்லை என்றால் உங்களால் நம்ப முடிகிகன்றதா? இங்கு சென்றால்சாலையில் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டாம்… சிக்னல் மாறுமா என்று ஹாரன் அடித்துக் கொண்டிருக்க வேண்டாம்… இதைக் கேட்க ஆச்சரியமாக இருந்தாலும், இது உண்மை.
உலகின் பல நாடுகளில் போக்குவரத்து நெரிசல் என்பது அன்றாட பிரச்சினையாக மாறிவிட்டது. குறிப்பாக பெருநகரங்களில் காலை, மாலை நேரங்களில் சாலைகள் வாகனங்களால் நிரம்பி வழிகின்றன.

வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை காலங்களில் இந்த நெரிசல் மேலும் அதிகரிக்கிறது. போக்குவரத்து சிக்னல்களும், விதிகளும் இருந்தும் பல இடங்களில் இந்த பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை.
போக்குவரத்து சிக்னல் இல்லாத நாடு
ஆனால், உலகில் ஒரு வித்தியாசமான நாடு இருக்கிறது. அங்கே ஒரு போக்குவரத்து சிக்னல் கூட கிடையாது. இருந்தாலும், சாலைகளில் குழப்பமும் இல்லை, பெரிய அளவிலான போக்குவரத்து நெரிசலும் இல்லை. அந்த நாடு தான் பூட்டான்.

ஒரு போக்குவரத்து சிக்னல் இல்லாமல் ஒரு நாடு எப்படி இயங்க முடியும் என்று பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். நமது நாடுகளில் சிக்னல்கள் இல்லாத சந்திப்புகளில் வாகனங்கள் அனைத்து திசைகளிலிருந்தும் வேகமாக வருவதால் குழப்பம் ஏற்படும்.
ஆனால் பூட்டானில் நிலைமை முற்றிலும் மாறுபட்டது. பூட்டானில், குறிப்பாக தலைநகர் திம்பு போன்ற முக்கிய நகரங்களில், பயிற்சி பெற்ற போக்குவரத்து காவலர்கள் கை சைகைகள் மூலம் வாகனங்களை ஒழுங்குபடுத்துகின்றனர்.

1990-களில் திம்புவில் போக்குவரத்து சிக்னல்களை அறிமுகப்படுத்த முயற்சி செய்யப்பட்டது. ஆனால் பொதுமக்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அவை பின்னர் அகற்றப்பட்டு மீண்டும் மனிதர்களால் கட்டுப்படுத்தப்படும் போக்குவரத்து முறை தொடரப்பட்டது.
பூட்டானின் சாலைகள் மற்றும் வட்டச் சந்திப்புகள் போக்குவரத்து ஓட்டத்தை கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளன. மேலும், அந்நாட்டின் மலைப்பாங்கான நில அமைப்பு வாகனங்களின் வேகத்தை இயற்கையாகவே கட்டுப்படுத்துகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, பூட்டானிய மக்கள் போக்குவரத்து ஒழுக்கத்தில் சிறந்து விளங்குகின்றனர்.
அவர்கள் சாலை விதிகளை மதிப்பதுடன், பாதசாரிகளுக்கு முன்னுரிமை வழங்குகின்றனர். தேவையில்லாமல் ஹாரன் அடிப்பது அங்கு மரியாதையற்ற செயலாகக் கருதப்படுகிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பூட்டான், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்காமல் கட்டுப்படுத்தி வருகிறது. இதனால், உலகின் பல நாடுகளைப் போல கடுமையான போக்குவரத்து நெரிசல் அங்கு உருவாகவில்லை.
போக்குவரத்து சிக்னல்கள் இல்லாமல் ஒரு நாடு இயங்க முடியும் என்பதற்கு பூட்டான் ஒரு வித்தியாசமான உதாரணமாக திகழ்கிறது. தொழில்நுட்பத்தை மட்டுமல்ல, மனிதர்களின் ஒழுக்கமும் பொறுப்புணர்வும் போக்குவரத்தை சீராக இயக்க முடியும் என்பதை இந்த நாடு பறைசாற்றுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |