100 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட புதிய பூனை இனம்! ஆய்வில் தெரியவந்த உண்மை
100 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர், அறிவியலுக்கு இதுவரை அறியப்படாத புதிய பூனை இனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.பொலிவியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த ஆச்சரியமான கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.
தென்அமெரிக்கா நாடான பொலிவியாவில், கடந்த 2017-ஆம் ஆண்டு, காட்டுப்பகுதி அருகே சாலையோரத்தில் இருந்த குட்டி பூனையை உள்ளூர் வாசி ஒருவர் வீட்டிற்கு கொண்டு சென்று வளர்த்தார். ஒரு சில நாட்களிலேயே அதன் செயல்பாடுகளில் சந்தேகம் அடைந்த உள்ளூர் வாசி, பூனை குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, பொலிவியாவில் பணியாற்றிய உயிரியல் நிபுணரும் National Geographic Explorer-ஆகவும் இருந்த பவுலா நோகலெஸ்-அஸ்கர்ருன்ஸுக்கு, அங்குள்ள உள்ளூர் வனவிலங்கு சரணாலயத்தில் வித்தியாசமான தோற்றம் கொண்ட பூனை ஒன்று இருப்பதாக தகவல் கிடைத்தது.
சுமார் ஒரு வருடத்துக்குப் பின்னர், அது காட்டுப் பூனை என்பதை உறுதி செய்த அவர், அந்த விலங்கை வனவிலங்கு சரணாலயத்தில் ஒப்படைத்தார்.
அதனை நேரில் பார்வையிட்டபோது, ஏற்கனவே அறியப்பட்ட காட்டுப் பூனைகளிலிருந்து அதன் தோற்றம் குறிப்பிடத்தக்க வகையில் மாறுபட்டிருப்பதை அவர் கவனித்தார்.

சிறிய சுருங்கிய முகம், குட்டையான வட்டமான காதுகள், நீண்ட மீசைகள் மற்றும் சிறுத்தையைப் போன்ற உடல் புள்ளிகள் என பல தனித்துவமான அம்சங்கள் அந்தப் பூனைக்கு இருந்தன. இதனால் ஆச்சரியமடைந்த நோகலெஸ்-அஸ்கர்ருன்ஸ், அந்தப் பூனையை சுமார் 100 புகைப்படங்கள் எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் ஏற்பட்ட குழப்பம்
முதற்கட்ட ஆய்வுகளில், இந்தப் பூனை ஏற்கனவே அறிவியலால் அடையாளம் காணப்பட்ட Leopardus tigrinus இனத்தைச் சேர்ந்ததாகவே விஞ்ஞானிகள் கருதினர்.
இந்த இனத்திற்கு Tigrina, Oncilla, Tigrillo மற்றும் Little Spotted Cat உள்ளிட்ட பல பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வுகள் மற்றும் மரபணு பகுப்பாய்வுகளின் பின்னர், இந்தப் பூனை ஏற்கனவே அறியப்பட்ட இனத்தைச் சேர்ந்ததல்ல என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இது அறிவியலுக்கு இதுவரை அறியப்படாத தனித்துவமான புதிய பூனை இனமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆய்வில் வெளியான தகவல்
பூனை குடும்பத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலான காலப்பகுதியில் புதிய இனமாக அறிவிக்கப்படும் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாக இது அமைந்துள்ளது.
இதன் மூலம், உலகின் பல பகுதிகளில் இன்னும் அறிவியலால் முழுமையாக அடையாளம் காணப்படாத வனவிலங்குகள் இருக்கக்கூடும் என்பதும் மீண்டும் வெளிப்பட்டுள்ளது.

இந்த புதிய பூனை இனம் தொடர்பான ஆய்வு Current Biology என்ற சர்வதேச அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
நூற்றாண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு அறிவியலுக்கே புதிதான ஒரு பூனை இனம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, வனவிலங்கு ஆராய்ச்சித் துறையில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |