கொழுப்பு கல்லீரல் நோய் : முகத்தில் தோன்றக்கூடிய எச்சரிக்கை அறிகுறிகள்!
தற்போது கொழுப்பு கல்லீரல் நோய் மிகவும் பொதுவான உடல்நலப் பிரச்சனையாக உள்ளது. முக்கியமாக, இந்த நோய் ஆரம்பத்தில் பெரிய அளவில் அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் அமைதியாக உருவாகும் தன்மை கொண்டது.
உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகப்படியான ஆல்கஹால் அருந்துவது கொழுப்பு கல்லீரலுக்கான முக்கிய காரணமாக இருந்தாலும், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், அதிக கொலஸ்ட்ரால் போன்றவைகளும் இந்தப் பிரச்சனைக்கு வழிவகுக்கலாம்.

ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோயை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், நாளடைவில் கல்லீரலில் வீக்கம், வடு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு, தீவிரமான நிலையில் கல்லீரல் புற்றுநோய்க்கும் வழிவகுக்கலாம்.
ஆனால், ஆச்சரியப்படும் வகையில், சிலருக்கு கொழுப்பு கல்லீரல் பிரச்சனையின் ஆரம்ப அறிகுறிகள் முகத்தில் சில மாற்றங்களாகத் தெரியக்கூடும். இந்த மாற்றங்களை கவனித்து, சரியான நேரத்தில் மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டால் பிரச்சனையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும்.

அப்படி கொழுப்பு கல்லீரல் இருந்தால் முகத்தில் என்னென்ன அறிகுறிகள் தெரியும் என்பது குறித்த விரிவான விளக்கத்தையும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
முக்கிய எச்சரிக்கை அறிகுறிகள்
முக வீக்கம்

கல்லீரல் சரியாக செயல்படாமல் இருப்பதன் முக்கியமான, முகத்தில் வெளிப்படையாகத் தெரியும் அறிகுறிகளில் ஒன்று முக வீக்கம். குறிப்பாக கண்கள் மற்றும் கன்னங்களைச் சுற்றி வீக்கம் காணப்படும்.
கல்லீரல் சரியாக செயல்படாதபோது, உடலுக்குத் தேவையான புரதங்களின் உற்பத்தி குறைந்து, திரவ சமநிலை மற்றும் இரத்த ஓட்டம் பாதிக்கப்படடும்.அதனால் எந்தவித அழற்சியும் இல்லாமல் தொடர்ந்து முகத்தில் வீக்கம் ஏற்பட்டால், அது கல்லீரலின் செயல்பாடு மோசமாக இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
எனவே, இதுபோன்ற அறிகுறியை தொடர்ந்து சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
கழுத்துப் பகுதியில் கருமை

கழுத்துப் பகுதியில் திடீரென கருமையான படலம் போன்ற தோற்றம் ஏற்பட்டால், அது இன்சுலின் எதிர்ப்புடன் தொடர்புடைய சில கல்லீரல் பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம்.
உடலில் இன்சுலின் அளவு அதிகமாக இருக்கும்போது, அது சருமத்தில் நிறமிகளின் உற்பத்தியை அதிகரித்து, குறிப்பாக கழுத்துப் பகுதியில் கருமையை ஏற்படுத்தலாம். இந்த மாற்றம் பெரும்பாலும் கழுத்துப் பகுதியில் தான் முதலில் கவனிக்கப்படும்.
எனவே, உங்கள் கழுத்துப் பகுதியில் திடீரென கருமை ஏற்படுவதை கவனித்தால், அதை சாதாரணமாக நினைக்காமல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
முகம் சிவந்து போவது

நாள்பட்ட கல்லீரல் பிரச்சனை சில நேரங்களில் முகம் சிவந்து போவதற்கும், ரோசாசியா போன்ற தோற்றத்தில் சிறிய கட்டிகள் அல்லது தடிப்புகள் ஏற்படுவதற்கும் காரணமாக இருக்கலாம்.
ஆனால் முகம் சிவந்து போவதற்கு கல்லீரல் நோய் மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. இருப்பினும், இதனுடன் முக வீக்கம், கழுத்துப் பகுதியில் கருமை போன்ற மற்ற அறிகுறிகளும் இருந்தால், கல்லீரல் தொடர்பான பிரச்சனையும் ஒரு காரணமாக இருக்கலாம்.
மேலும், கல்லீரலின் செயல்பாடு பாதிக்கப்படுவதால் ஏற்படும் ஜிங்க் போன்ற ஊட்டச்சத்து குறைபாடுகள், வாயைச் சுற்றி தடிப்புகள் அல்லது லேசான எரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.
ஏனைய அறிகுறிகள்

கொழுப்பு கல்லீரல் நோய் தீவிரமடையும் போது, உடலில் பிலிரூபின் அதிகமாக தேங்கலாம். இதனால் கண்கள் மற்றும் சருமம் மஞ்சள் நிறமாக மாறி, மஞ்சள் காமாலை ஏற்படலாம்.சிலருக்கு இரத்தத்தில் பித்த உப்புக்கள் அதிகமாக சேர்வதால், முகத்தில் கடுமையான அரிப்பும் ஏற்படலாம்.
எனவே, எந்தவித காரணமும் இல்லாமல் இதுபோன்ற அறிகுறிகள் தொடர்ந்து காணப்பட்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய பரிசோதனைகளை செய்து கொள்வதன் மூலம் ஆரம்ப கட்டத்திலேயே கல்லீரல் பிரச்சினையை கண்டறிந்து சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |