12-ஆம் வகுப்பில் தோல்வியடைந்த தமிழ் இளைஞர் ! இன்று 18 கோடி ரூபாய் ஈட்டும் நிறுவனத்தின் உரிமையாளரானது எப்படி?
12-ஆம் வகுப்பில் தோல்வியடைந்த தமிழ் இளைஞர் இன்றைக்கு வர்ஜீனியாவில் 18 கோடி ரூபாய் ஈட்டும் நிறுவனத்தின் உரிமையாளராக கதை தான் இது.
முப்பத்து ஆறு வயது இளைஞரான சரவணன் நாகராஜ் 12ஆம் வகுப்பைக் கூட முடிக்காதவர்.
இவர் தமிழ்நாட்டின் சிறிய நகரான விருத்தாசலத்தில் இருந்து புறப்பட்டு இப்போது அமெரிக்காவின் வர்ஜினியாவில், வானன் ஆன்லைன் சேவைகள் என்ற நிறுவனத்தை நடத்துகிறார்.
ஆண்டு வருவாய் 2.5 மில்லியன் டாலர் (தோராயமாக ரூ.18.5 கோடி) அவரது இந்த நிறுவனம் மொழிபெயர்ப்பு, டிரான்ஸ்கிரிப்ஷன், குரல் பதிவு, மொழிமாற்றப்படங்களுக்கு சப்-டைட்டில் பணிகள், கேப்ஷனிங் ஆகிய பணிகளைச் செய்து வருகிறது.

சென்னையிலும் வர்ஜினியாவிலும் அலுவலகங்களைக் கொண்டிருக்கும் இந்நிறுவனம் உலகம் முழுவதும் தங்களது புராஜெக்ட்களை அவுட்சோர்சிங் கொடுத்தும், சர்வதேச திறனாளர்களுடனும் பணியாற்றி வருகிறது. சரவணனின் வாழ்க்கை பல்வேறு உணர்வுகளுடன் கூடிய ஏற்ற இறக்கங்களைக் கொண்டதாகும்.
அவரது குழந்தைப் பருவகாலத்தில் நல்ல கல்வி அனுபவத்தைப் பெற்றார். பின்னர் அரசுப் பள்ளிக்கு இடம் மாறினார். 12ஆம் வகுப்பில் தோல்வியடைந்தார். 18 வயதில் வேலை தேடி சென்னை சென்றார்.
இறுதியில் ஓர் நிறுவனத்தை அமைத்தார். இப்போது அந்த நிறுவனத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். சரவணனின் தந்தை வாடகைக் சைக்கிள் கடையும் ட்ராவல்ஸ் நிறுவனத்தையும் விருதாசலத்தில் நடத்தி வந்தார்.
தந்தையின் தொழிலில் பெரும் இழப்பு ஏற்பட்டது. இதனால் அவரது குடும்பம் கடினமான சூழல்களை எதிர்கொண்டது. “என் தந்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்திருந்தார்.

தண்ணீர் பாட்டில் தயாரிக்கும் நிறுவனத்தையும் நடத்தி வந்தார். அதே போல சிட்பண்ட் தொழிலிலும் கால் பதித்தார்,” என்றார் சரவணன். அடுத்தடுத்து டிராவல் நிறுவனத்தின் கார்கள் விபத்தைச் சந்தித்தன.
சிட்பண்டில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டனர். “எனது தந்தை தண்ணீர் ஆலையை விற்பனை செய்து விட்டார். கடன்களை அடைப்பதற்காக இதர சொத்துகளையும் விற்றுவிட்டார்,” என்றார் சரவணன்.
அப்போது சரவணன், விருத்தாசலம் அருகில் உள்ள கடலூரில் ஓர் உறைவிடப் பள்ளியில் தங்கி 8-ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தார்.
குடும்பத்தின் நிதி நெருக்கடி காரணமாக அப்பள்ளியில் அவரால் படிக்க முடியவில்லை. மீண்டும் விருத்தாசலத்துக்கு அழைத்து வரப்பட்டார். அங்கே அவர் ஒரு கிறித்துவப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் 11 மற்றும் 12ஆம் வகுப்புக்கு அரசுப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் கம்ப்யூட்டர் அறிவியலில் சரவணன் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
12ஆம் வகுப்பில் அதுதான் அவருக்குப் பிடித்தமான பாடமாக இருந்தது. இதையடுத்து அவர் என்ஐஐடி கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் சேர்ந்தார்.
அங்கு பெரும்பாலான நேரத்தை செலவிட்டார். பள்ளிக்குச் செல்வதை தவிர்க்க ஆரம்பித்தார். இதன் விளைவாக அவர் 12ஆம் வகுப்புக் கணிதப்பாடத்தில் தோல்வியடைந்தார். பின்னர் இரண்டு முறை முயற்சி செய்தபோதும் அவரால் அந்த பாடத்தில் தேர்ச்சி பெற முடியவில்லை.
எனவே படிப்பில் இருந்து வெளியேறுவது என்றும் வேலை தேடுவது என்றும் முடிவு செய்தார். “கம்ப்யூட்டர் குறித்த எனது அறிவு காரணமாக, உள்ளூர் கம்ப்யூட்டர் மையத்தில் எனக்கு பயிற்சியாளராக வேலை கிடைத்தது,” என்றார் அவர். சரவணனுக்கு அப்போது 18வயதுதான் ஆகியிருந்தது.
பொறியியல், எம்.சி.ஏ.,மற்றும் இளநிலை பட்டம் படிக்கும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கற்றுக் கொடுத்தார். பின்னர், விருத்தாசலத்தில் உள்ள என்ஐஐடி பயிற்சி மையத்தில் ஒரு பயிற்சியாளராக ரூ.2500 சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார். என்ஐஐடி-யில் ஓர் ஆண்டு பணியாற்றிய பின்னர், ஒரு புரோக்கிராமராக ஆவதற்காக சரவணன் சென்னைக்குச் சென்றார்.
சென்னையில் ஆங்கிலத்தில் பேசுதல் குறித்த இரண்டு மாத பயிற்சி வகுப்பில் சேர்ந்தார். ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளும் திறனை வளர்த்துக் கொண்டார். இதன் வாயிலாக அவருக்கு மொபைலிங் நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் ரூ.1,700 சம்பளத்தில் வேலை கிடைத்தது.
பின்னர் ஏர் டெல் நிறுவனத்தில் புகார்களுக்கு தீர்வு காணும் குழுவில் ரூ.4500 சம்பளத்தில் வேலை கிடைத்தது.
“என்னுடைய கம்ப்யூட்டர் அறிவு காரணமாக ஏர்டெல்(தமிழ்நாடு) நிறுவனத்தில் புகார்களுக்குத் தீர்வு காண்பதற்கான நேரத்தை 36மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரமாகக் குறைத்தேன்.
பின்னர் அதனை வெறும் இரண்டு மணி நேரமாகக் குறைத்தேன்,” என்றார் பெருமையுடன். நியூயார்க் நகரில் ஒரு மனிதவள ஆலோசனை நிறுவனத்தில் அவருக்கு வேலை கிடைத்தது.
ஆனால், அந்த வேலையில் நிலை நிறுத்திக் கொள்வதற்கு முன்பாக, ஒரு ஹாஸ்டலில் இருந்து இன்னொருவருடன் பகிர்தல் அடிப்படையில் தங்கும் இடத்துக்கு மாறுவதற்காக தமது உயர் அதிகாரியிடம் ஒரு நாள் சற்று சீக்கிரம் செல்ல அனுமதி கேட்டார்.
ஆனால், அனுமதிக்குப் பதில் வேலையில் இருந்து நீக்கப்பட்டார். “இங்கு நான்(அமெரிக்காவில்) ஒவ்வொன்றிலும் அபாயமான சூழலில் இருந்தேன் என்பது அந்த பெண் அதிகாரிக்குத் தெரியும். ஆனால், அவர் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டார்.
நான் அந்த அலுவலகத்தில் இருந்து வெளியேறியபோது கண்ணீர் என் கன்னங்களில் உருண்டோடியது,” என்று நினைவு கூர்ந்தார். வெளிநாட்டில் யார் ஒருவரையும் தெரியாத நிலையில் சரவணன் வேலை தேடத் தொடங்கினார். அலுவலகங்களுக்குச்சென்று பலரை சந்தித்தார். மன்ஹாட்டனில் ஏழாவது அவென்யூவில் உள்ள ஒரு அலுவலகத்தில் ஃபிரடெரிகோ என்பவரைச் சந்தித்தார்.
அவர் ஓர் இணையதளத்தை மறுவடிவமைப்பு செய்து தரும் வேலையை இவருக்குக் கொடுத்தார். “பிரட் இப்போது என்னுடைய நல்ல நண்பர்களில் ஒருவர். நான் மிகவும் தீவிரமாக வேலை தேடிக் கொண்டிருந்தபோது ஒரு வாய்ப்பை வழங்கினார். அந்தப் பணியை தொடங்குவதற்கு 250 டாலர் காசோலையையும் எனக்குக் கொடுத்தார்,” என்று நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
“பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் புதிய வேலைவாய்ப்புகளைத் தேடி மன்ஹாட்டன் செல்லும்போது, ஃபிரடெரிகோவைச் சந்திப்பேன். ஒருமுறை அவரைச் சந்தித்தபோது, மன்ஹாட்டனில் இருந்து வேலை பார்க்க ஒரு இடத்தை தேர்வு செய்யும்படி ஆலோசனை சொன்னார்.
ஆனால், என்னிடம் அதற்கு பணம் இல்லை என்பதைத் தெரிந்து, அவருடைய அலுவலகத்திலேயே எனக்கு ஒரு மேஜையை இலவசமாக ஒதுக்கிக் கொடுத்தார்,” என்றார் அவர். சரவணனுக்கு மேலும் சில புராஜெக்ட்கள் கிடைத்தன.
தம்முடைய உதவிக்காக மேலும் இரண்டு நபர்களை வேலைக்கு எடுத்தார். அமெரிக்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே பயணித்துக் கொண்டிருந்தார்.
அவருடைய தங்கை பாரதி பிரியா சென்னை அலுவலகத்தை கவனித்துக் கொண்டார். தொழில் வளர்ச்சியடையத் தொடங்கியது, 2013-ஆம் ஆண்டு சரவணன் தமது அலுவலகத்தை கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை அண்ணாநகருக்கு மாற்றினார். இப்போது அங்கு 25 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
2015-ஆம் ஆண்டு அம்பத்தூர் தொழில் வளாகத்தில் இந்தியாபுல்ஸ் பார்க்கில் 7000 ச.அடி அளவு பெரிய இடத்துக்கு அலுவலகத்தை மாற்றினார். வானன் ஆன்லைன் சேவைகள் நிறுவனத்தை வர்ஜீனியாவில் கடந்த 2016-ஆம் ஆண்டு 12 பேருடன் தொடங்கினார்.
தவிர வானன் ஹெல்த்கேர் எனும் சிறு அளவிலான மருத்துவமனைகளுக்கு மெடிக்கல் பில்லிங் சேவைகள் வழங்கும் நிறுவனத்தையும் தொடங்கினார். சரவணன், மென்பொருள் பொறியாளர் ஸ்ரீவித்யாவை திருமணம் செய்து கொண்டார். அவரும் இப்போது சரவணனின் தொழிலுக்கு உதவி செய்கிறார்.
இந்த தம்பதிக்கு சமந்தா ஸ்ரீ(4), தியா(3) என இரண்டு மகள்கள் உள்ளனர். சரவணன், வானன் ஆன்லைன் சேவைகளை அமேசான் சேவைகளைப் போல நிலை நிறுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் உள்ளார். “நான் மக்களை இணைக்க விரும்புகின்றேன். சர்வதேச அளவில் மேலும் பல சேவைகளைக் கொடுக்க விரும்புகின்றேன்.
ஏதேனும் டிஜிட்டல் ஆக பெற வேண்டும் என்று நீங்கள் விரும்பும் போது, நீங்கள் வானன் பற்றி சிந்திக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்” என்று கூறுகிறார்.
இதற்கிடையே, பொது அறிவு, வரலாறு மற்றும் பல்வேறு பிரிவுகளில் ஆங்கிலத்தில் சிறிய யூடியூப் வீடியோக்கள் கொண்டு வரவேண்டும் என்றும் அவர் திட்டமிட்டிருக்கிறார்.