விசித்திர மருத்துவ குணங்கள் நிறைந்த திரிபலா! இதை எப்படி சாப்பிட்டால் நன்மை?
சித்த மருத்துவத்தில் திரிபல பல நோய்களுக்கான நிவாரணியாக பயன்படுத்தப்படுகின்றது.

திரிபலா வாய்ப்புண்ணிலிருந்து, வயிற்றுப்புண், குடல்புண் போன்ற பல பிரச்னைகளுக்கும், சர்க்கரை நோய், மலச்சிக்கல், உயர் ரத்த அழுத்தம், உடற்பருமன், மூட்டு வலி என பல நோய்களுக்கு அருமருந்தாகிறது. திரிபலா கடுக்காய் தான்றிக்காய் நெல்லிக்காய் ஆகிய மூன்றிலும் இருந்து செய்யப்படுகின்றது.

திரிபலா வயிற்றுக்கு மிகவும் நன்மை தரும். இது சிறுகுடல் மற்றும் பெருங்குடல் சுத்தம் செய்கிறது. வயிற்றில் இருக்கும் கிருமிகளை அடியோடு அழிப்பதற்கு இந்த திரிபலா பயன்படுகிறது. மேலும் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கிறது. மேலும் உடலில் உள்ள சதைகளை இருக்கி உடல் கட்டுடன் வைக்க உதவி செய்கிறது. திரிபலா அஜீரண கோளாறை சரிசெய்து நல்ல ஜீரண சக்தியை தருகிறது.

தான்றிக்காய் - தான்றிக்காய் ரத்த ஓட்டத்தை சீராக்கவும், ரத்தத்தை சுத்தப்படுத்தவும் உதவுகிறது. இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதுடன், கிருமி எதிர்ப்பு தன்மையாலும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும், குரல் மற்றும் கண் பார்வை ஆரோக்கியத்திற்கு ஆதரவாக இருப்பதுடன், முடியின் வேர்களை வலுப்படுத்தி, முடியின் இயற்கை நிறத்தைப் பராமரிக்கவும் உதவுகிறது.
கடுக்காய் - கடுக்காயில் இனிப்பு, உவர்ப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு என ஐந்து சுவைகள் இருக்கிறது. இது மூலநோய், இரத்த சோகை, செரிமானக் கோளாறுகள் மற்றும் பித்தப்பை கற்கள் போன்ற பிரச்சினைகளுக்கு நிவாரணம் தரும். மேலும், தலைவலி, இருமல், காய்ச்சல், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளில் நிவாரணம் தரும் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.
நெல்லிக்காய் - நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. இது சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்டாக செயல்பட்டு, உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கிருமிகளை வெளியேற்ற உதவுகிறது. மேலும், நுரையீரல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், சுவாசக்குழாயில் தேங்கியுள்ள சளியை கரைக்கவும் நெல்லிக்காய் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது.

எப்படி திரிபலா தயாரிக்கலாம்?
நெல்லிக்காய் - 4 பங்கு, தான்றிக்காய் - 2 பங்கு, கடுக்காய் - 1 பங்கு அளவில் எடுத்துகொள்ள வேண்டும். நெல்லிக்காய், கடுக்காயை விதை நீக்கி பயன்படுத்த வேண்டும். இந்த மூன்றையும் நிழலில் காயவைத்து அரைத்து பொடியாக்கவும். கடுக்காய், தான்றிக்காய் நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும் என்றாலும் தயாரிக்க சிரமம் இருப்பவர்கள் நாட்டு மருந்துகடைகளில் கிடைக்கும் பொடியை வாங்கி பயன்படுத்தலாம்.

திரிபலா பயன்படுத்தும் முறை
திரிபலா சூரணத்தை இரண்டு டீஸ்பூன் தண்ணீரில் கலக்கி இரவு முழுவதும் ஊற வைத்து விடவேண்டும். பின்பு காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இரண்டு டீஸ்பூன் அளவு திரிபலா பவுடருடன் சிறிது அளவு இலவங்கப்பட்டையை சேர்த்துக்கொள்ளவேண்டும். பின்பு இரண்டையும் தண்ணீரில் ஒரு இரவு முழுவதும் ஊறவைத்து விடவும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இதை குடிக்கவும். தேவைப்பட்டால் ஒரு டேபிள்ஸ்பூன் தேனை இதில் சேர்த்து குடிக்கலாம். திரிபலா சூரணத்தை வைத்து தேனீரும் தயாரிக்கலாம். திரிபலா சூரணத்தை வைத்து தேனீர் தயாரிக்க முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு திரிபலா பொடியை எடுத்து கொதிக்கும் நீரில் போட்டு விடவேண்டும். இதை ஆறவைத்து ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எலுமிச்சைச் சாறு பிழிந்து அதில் விட்டு குடித்தால் நன்மை பலமாக கிடைக்கும்.

இதை இரவில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மை என்ன?
திரிபலாவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகின்றன. மேலும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை எதிர்க்கும் திறனும் இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது மலச்சிக்கலைக் குறைத்து, குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. குடலில் உள்ள சில வகை புழுக்கள் மற்றும் தொற்றுகளைக் கட்டுப்படுத்தவும், உணவுப் பாதையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் துணைபுரிகிறது. மேலும், சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்தியை ஆதரித்து ரத்தசோகையை குறைக்கவும், ரத்தச் சர்க்கரை அளவை சமநிலையில் வைத்திருக்கவும் உதவக்கூடும்.

திரிபலாவை யார் தவிர்க்க வேண்டும்?
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி திரிபலா சூரணத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது. குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு முன் சித்த மருத்துவர் அல்லது தகுதியான மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம். மேலும், ஏதேனும் நோய்களுக்காக மருந்துகள் எடுத்துக்கொண்டு இருப்பவர்கள், மருந்துகளுடன் இடையூறு ஏற்படாமல் இருக்க மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே திரிபலாவைப் பயன்படுத்த வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |