இலங்கையில் உணவு தட்டுப்பாடு... மளிகை கடைகள் மூடப்படும் அவலம்!
இலங்கையில், உச்சம் தொட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருகிறது. தேவையான எரிபொருள் கிடைக்காததால் வாகனங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
இதில், முக்கியமாக நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு அதிகரித்து உள்ளது. இதனால் மக்கள் அன்றாடம் பெரும் சிக்கலில் தவித்து வருகின்றனர்.
தொடர்ந்து, வாகன இயக்கம் இல்லாததால் கடைகள் மற்றும் சந்தைகளுக்கு பொருட்கள் வரத்து குறைந்து விட்டது. ஒரு வாரமாக இந்த நிலை நீடிப்பதால் சிறிய கடைகள் முதல் பெரிய சூப்பர் மார்க்கெட் வரை அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும் உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பு கரைந்து வருகிறது.

இதனால் கடைகள் அடுத்தடுத்து மூடப்பட்டு வருகின்றன. அதன்படி தலைநகர் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் போதுமான இருப்பு வந்து சேராமல் கடை உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர்.
இதன் காரணமாக இலங்கை மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் அச்சம் வெளியிட்டு உள்ளனர்.