தனி அறையில் பூட்டி வைத்து மாப்பிள்ளை வீட்டார் செய்த கொடுமை! விசாரணையில் வெளியான அதிர்ச்சி
வரதட்சணையாக கார் வாங்கி தரக்கோரி பெண்ணை தனி அறையில் பூட்டிவைத்து, உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்த கணவர், குடும்பத்தினர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருக்கனூர் காலனி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் உலகநாதன், இவரின் மகள் செவ்வந்தி. இவருக்கும் சேதராப்பட்டு பழைய காலனியை சேர்ந்த புரட்சி வேந்தன் என்பவருக்கும் திருமணம் நடந்தது.
இதனிடையே, திருமணத்தின் போது செவ்வந்திக்கு அவரது பெற்றோர் 20 பவுன் நகை மற்றும் சீர்வரிசை பொருட்களை வரதட்சணையாக கொடுத்தனர். மேலும், மாப்பிள்ளைக்கு 5 பவுன் நகையும், கார் வாங்க 2 லட்சம் ரொக்கப்பணமும் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில், திருமணம் முடிந்த சில நாட்களில் கூடுதல் வரதட்சணை கேட்டு புரட்சிவேந்தனின் தாய், தந்தை ஆகியோா் தனி அறையில் அடைத்து வைத்து, உணவு கொடுக்காமல் சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதைப்பற்றி, செவ்வந்தி தனது பெற்றோருக்கு தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் அவரது பெற்றோர், மருமகன் புரட்சிவேந்தனிடம் நியாயம் கேட்டு, மகளை தங்கள் வீட்டுக்கு அழைத்துச்சென்றனர். மேலும், மாமனார், மாமியார் கொடுமைப்படுத்தியது குறித்து வில்லியனூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் செவ்வந்தி புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின்போது, இனிமேல் வரதட்சணை கேட்டு கொடுமை செய்யமாட்டோம் என்று புரட்சிவேந்தன் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்த நிலையில்., செவ்வந்தி, புரட்சிவேந்தனுடன் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார். சில நாட்களுக்கு பிறகு மீண்டும் புரட்சிவேந்தன், பெற்றோர் மற்றும் உறவினர் ரோகிணி ஆகியோரின் துரண்டுதலின்பேரில் வரதட்சணையாக கார் வாங்கித்தர கேட்ட செவ்வந்தியை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து வில்லியனூர் அனைத்து மகளிர் போலீசில் செவ்வந்தி புகார் அளித்தார். அதன்பேரில் புரட்சிவேந்தன், அவரது தந்தை, தாய் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.