போட்டிக்கு முன்னால் என்னை ஆடையை மாற்றச் சொன்னது ஏன்? சர்ச்சையை கிளப்பிய மேரி கோம்
தனது ஒப்பற்ற விளையாட்டு திறமையால் உலக வீராங்கனைகளையே ஆச்சர்யத்தில் ஆழ்த்திய அயன் லேடி எனக் கொண்டாடப்படும் இந்தியக் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் டோக்கியோ ஒலிம்பிக்கில் காலிறுதிப் போட்டிக்கு முந்தைய போட்டியில் தோல்வி அடைந்து இருக்கிறார்.
இதையடுத்து ஒலிம்பிக் போட்டியில் குத்துச் சண்டைக்கு வைக்கப்படும் மதிப்பீட்டு புள்ளிகள் குறித்து அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
மேலும் போட்டி நடைபெறுவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னர், தன்னுடைய ஆடையை ஏன் மாற்றச் சொன்னார்கள்? இதற்கு என்ன காரணம்? என்றும் அவர் தனது டிவிட்டரில் சரமாரியாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இந்த கேள்விகளை அவர் தன்னுடைய சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இது தற்போது சமூகவலைத்தளத்தில் விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது. ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீராங்கனையான மேரி கோம் காலிறுதிக்கு முந்தைய போட்டியில் கொலம்பியா வீராங்கனை வேலன்சியாவை எதிர்கொண்டார்.
இரண்டு சுற்றுகளில் மேரி கோமே வெற்றிப்பெற்றார். ஆனால் முடிவை அறிவிக்கும்போது கொலம்பியா வீராங்கனை வேலன்சியா வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து காலிறுதிக்கு தகுதிப் பெறாமலேயே தற்போது மேரி கோம் போட்டியை விட்டு வெளியேறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், நான் வெற்றிப் பெற்றதாகவே நினைத்திருந்தேன். இரண்டு சுற்றுகளில் முன்னிலை பெற்ற நான் எப்படி இந்தப் போட்டியில் தோல்வியைத் தழுவினேன்.
அதைத்தவிர போட்டிக்கு ஒரு நிமிடம் இருக்கும்போது என்னை ஏன் உடையை மாற்றச் சொன்னார்கள் எனக் ஆதங்கமாக கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் புள்ளி மதிப்பீட்டில் தவறு இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் மேரி கோம் கலந்து கொண்ட போட்டியில் நடந்தது என்ன என்பது குறித்த விவாதம் சோஷியல் மீடியாவில் தற்போது சூடு பிடித்து இருக்கிறது. காலிறுதி போட்டிக்கு முந்தைய போட்டியில் கலந்துகொண்ட மேரி கோமிற்கு முதல் சுற்றில் ஒரு நடுவர் மட்டுமே அதிக புள்ளிகளை வழங்கி இருந்தார்.
மற்ற 4 நடுவர்களும் வேலன்சியாவிற்கே அதிகப் புள்ளிகளை கொடுத்து இருந்தனர். அடுத்த சுற்றில் 3 நடுவர்கள் மேரி கோமிற்கு அதிகப் புள்ளிகளை வழங்கி இருந்தனர். ஆனால் இந்தச் சுற்றிலும் 2 அதிகப் புள்ளிகளை வேலன்சியா பெற்றிருந்தார்.
இதனால் 3 அதிகமான புள்ளிகளைப் பெற்று தற்போது வேலன்சியா அடுத்த சுற்றுக்குத் தகுதிப் பெற்றுள்ளார். ஆனால் பலமுறை உலகச் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற மேரி கோம் போட்டியில் இருந்து விலக்கப்பட்டு இருக்கிறார். இந்த அதிர்ச்சியை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் குத்துச்சண்டையில் எப்படி புள்ளிகள் மதிப்பிடப் படுகிறது. இந்தப் மதிப்பீடு சரியானதுதானா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
You May Like This Video