செட்டிநாடு ஸ்டைல் காளான் குருமா...வீட்டிலேயே ஓட்டல் சுவையில் செய்வது எப்படி?
காளான் ரத்தத்தில் கலந்திருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.
காளானை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளுவதால் அதிகமான நன்மைகள் பெற்று கொள்ள முடியும்.
இன்று நாம் செட்டிநாடு ஸ்டைல் காளான் குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- பட்டன் காளான் - 200 கிராம்
- சின்ன வெங்காயம் - 10 - 12 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும் )
- தக்காளி - 2 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும் )
- இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
- கொத்தமல்லி - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
செட்டிநாடு மசாலா வறுத்து அரைப்பதற்கு
- வர மிளகாய் - 4
- தனியா - 1 தேக்கரண்டி
- மிளகு - 1/2 தேக்கரண்டி
- சீரகம் - 1/2 தேக்கரண்டி
- பொட்டுக்கடலை - 1/2 மேஜைக்கரண்டி
- துருவிய தேங்காய் - 1 கைப்பிடி
- கசகசா - 1/2 தேக்கரண்டி(விருப்பத்திற்கேற்ப )
தாளிப்பதற்க்கு
- எண்ணெய் - தேவையான அளவு
- பிரியாணி இலை - 1
- பட்டை - 1/2 அளவு
- கிராம்பு - 2
- ஏலக்காய் - 1
- சோம்பு - 1/2 தேக்கரண்டி
- கறிவேப்பில்லை - 2 கொத்து
செய்முறை
சின்ன வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும். காளானை கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வத்து வறுத்து அரைக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றின் பின் ஒன்றாக சேர்த்து வறுக்கவும். கடைசியாக தேங்காய் சேர்த்து வறுக்கவும்.
சுமார் 1 அல்லது 2 நிமிடம் வறுத்த பின்பு ஆறவிடவும். ஆறிய பொருட்களை மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டு மைய அரைத்து வைக்கவும். இது தான் செட்டிநாடு மசாலா.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து தாளித்த பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பின் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். இதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

இதனுடன் வெட்டி வைத்துள்ள காளான் சேர்த்து கிளறவும். காளான் வதங்கும் பொழுது தண்ணீர் விடும்.
காளான் தண்ணீர் விட ஆரம்பித்ததும் 1/2 - 1 கப் அளவு தண்ணீர் விட்டு மிதமான தீயில் கலவையை வேகவைக்கவும்.
குருமா சிறிது நேரத்தில் எண்ணெய் விட ஆரம்பிக்கும் அப்பொழுது கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.
காளான் வேக வெகு நேரம் ஆகாது. 15 நிமிடங்களே போதுமானது.
இப்போது சூப்பரான செட்டிநாடு காளான் குருமா ரெடி.