தக்காளி சட்னி கெட்டியா இருக்கணுமா? இந்த ஒரு பொருளை சேர்த்து செஞ்சு பாருங்க...
பொதுவாகவே இட்லிக்கு தொட்டுக்க தக்காளி சட்னியை விடவும் சிறந்த தெரிவு இருக்க முடியாது. அந்தளவுக்கு இந்திய உணவுகளில் தக்காளி சட்னி முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு உணவு தான் தக்காளி சட்னி.
வழக்கமாக செய்யும் தக்காளி சட்னியை விட, சட்னி அரைக்கும் போது அத்துடன் 2 கைப்பிடி புதினாவை சேர்த்து அரைத்தால் சட்னி கெட்டியாக இருப்பதுடன் அதன் சுவையும் மணமும் இன்னும் அசத்தலாக இருக்கும். எப்படி செய்யலாம் என பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 4
வெங்காயம் - 4
பெரிய தக்காளி - 2
புதினா - 2 கைப்பிடி
உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.பின்பு தககாளியை சேர்த்து, மென்மையாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் 2 கைப்பிடி புதினாவை சேர்த்து 1 நிமிடம் வரை நன்றாக வதக்கி தனியாக ஒரு பாத்திரத்தில் சிறிது நேரம் ஆறவிட வேண்டும்.
ஆறியதும் வதக்கிய பொருட்களை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சற்று கொரகொரப்பான பதத்தில் அரைத்து கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் சேர்த்தால் மணமணக்கும் சுவையில் கெட்டியான தக்காளி சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |