மொறு மொறு மசாலா வடை செய்வது எப்படி?
நீங்கள் மசாலா வடை பிரியர் என்றால், அந்த மசாலா வடையை வீட்டில் எளிய முறையில் செய்து சாப்பிடுங்கள்.
வீட்டில் மசாலா வடை செய்தால், எவ்வளவு வேண்டுமானாலும் ஆசை தீர சாப்பிடலாம் அல்லவா?
உங்கள் வீட்டில் எப்படி சுவையான மசாலா வடை செய்வதென்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- கடலை பருப்பு - 1/2 கப்
- வெங்காயம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
- கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன்
- உப்பு - சுவைக்கேற்ப
- பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
- எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

அரைப்பதற்கு...
- சோம்பு - 1 டீஸ்பூன்
- பூண்டு - 4 பல்
- வரமிளகாய் - 4
- இஞ்சி - 1/2 இன்ச்
செய்முறை
முதலில் கடலைப்பருப்பை நீரில் 2-3 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
பின் மிக்சர் ஜாரில் இஞ்சி, பூண்டு, வரமிளகாய் மற்றும் சோம்பு சேர்த்து அரைத்து, அத்துடன் பாதி கடலைப்பருப்பை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் சற்று கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அரைத்ததை ஒரு பௌலில் போட்டு, அத்துடன் மீதமுள்ள கடலைப் பருப்பு, வெங்காயம், கொத்தமல்லி, உப்பு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டையாக வடை போன்று தட்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள வடைகளை போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மசாலா வடை தயார்.