செரிமாக அமைப்பை சீராக்கும் கொத்தமல்லி காரகுழம்பு! இப்படி செய்து அசத்துங்க
பொதுவாகவே தென்னிந்திய சமையல்களில் கொத்தமல்லிக்கு முக்கிய இடம் காணப்படுகின்றது. அதன் சுவை மற்றும் நறுமணம் காரணமாக பிரியாணியில் ஆரம்பித்து ரசம் வரையில் அனைத்திலும் கொத்தமல்லி தனக்கான இடத்தை நிச்சயம் பிடித்துவிடுகின்றது.
அது சுவை, மணத்துக்கு மாத்திரமன்றி ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்களுக்கு பெரிதும் அறியப்படுகின்றது.

கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் ஏ, சி என பல வைட்டமின்களும் உள்ளன. கொத்தமல்லி இலைகளில் நார்ச்சத்துக்கள், இரும்புச் சத்து, மாங்கனீஸ், கால்சியம், என்பனவும் செறிந்து காணப்படுகின்றது.
இதனை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதால், உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் வலுவாக அதிகரிப்பதுடன், அதில் காணப்படும் நார்ச்சத்து, செரிமான அமைப்பை சீராக்குவதுடன் மலச்சிக்கலுக்கும் தீர்வு கொடுக்கும்.

குறிப்பான உடல் எடையை கட்டுக்குள் வைக்கவேண்டும் என்று போராடுபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும்.
இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள கொத்தமல்லியில் வழக்கம் போல் சட்னி செய்யாமல் ஒரு தடவை இந்த முறையில் அசத்தலாக காரகுழம்பு செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்
கொத்தமல்லி இலை -1 கப்
புளி - சிறிதளவு
சாம்பார் பொடி -1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் -¼ தே.கரண்டி
மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி
சின்ன வெங்காயம் -10
பூண்டு பல் -10
வெல்லம் - ¼ தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு

தாளிக்க தேவையானவை
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு - ½ தே.கரண்டி
வெந்தயம் - ¼ தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி
துவரம் பருப்பு - 1 தே.கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை
முதலில் புளியை 20 நிமிடங்கள் சூடான தண்ணீரில் ஊற விட்டு, அதை கரைத்து வடிக்கட்டி ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை நறுக்கி தனியாக ஒரு தட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் நறுக்கிய கொத்தமல்லியை ஒரு மிக்சி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் சேர்த்து சூடாக்கி, கடுகு சேர்த்து தாளித்து கடுகு பொரிந்ததும் வெந்தயம், உளுத்தம் பருப்பு, துவரம்பருப்பு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க வேண்டும்.

அதன் பின்பு நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வதக்கி, பூண்டு வாசனை வந்ததும், புளி சாறு, சாம்பார் பொடி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் அரைத்த கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும்.
பின்னர் அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு குழம்பு நன்றாக கொதித்து கெட்டியாகும் போது வெல்லத்தைச் சேர்த்து கலந்துவிட்டு இறக்கினால், அவ்வளவு தான் அருமையான சுவையில் திக்கான கொத்தமல்லி குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |