இன்றிரவு நான் உயிரோடு இருப்பேனா என்று தெரியவில்லை: சகோதரருக்கு இளம்பெண் கடைசியாக அனுப்பிய ஆடியோ
கேரளாவில் வரதட்சணை கொடுமையால் பெண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொள்வது அதிகமாகிக்கொண்டே வருகின்றது.
இந்நிலையில் மீண்டும் வரதட்சணை கொடுமையால் கேரளாவில் ஒரு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
சுனிஷாவுக்கும் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜீஸ் என்பவருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
சுனிஷா புகுந்த வீட்டில் இறந்து கிடப்பதாக தகவல் வர அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று எல்லோரும் நினைக்க, அது தற்கொலையா கொலையா என்று மரணத்தில் மர்மம் உள்ளது என்று சுனிஷாவின் குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
வரதட்சிணைக் கொடுமையால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த சுனிஷா, உங்களால் முடிந்தால் தயவு செய்து இப்போதே வாருங்கள் என்னை அழைத்துச் செல்லுங்கள். நான் வர தயாராக இருக்கிறேன்.
கணவரும் அவரது தாயாரும் என்னை அடித்து துன்புறுத்துகிறார்கள். இன்றிரவு நான் உயிரோடு இருப்பேனா என்று கூட தெரியவில்லை என்று தன் சகோதரனுக்கு ஒரு ஆடியோ அனுப்பி இருக்கிறார். அன்று இரவு தான் சுனிஷா இறந்துவிட்டதாக தகவல் வந்திருக்கிறது.
சுனிதா மரணம் குறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர். ஆனால், அரசியல் செல்வாக்கு உள்ள குடும்பம் என்பதால் விசாரணையில் மெத்தனம் காட்டுவதாக குடும்பத்தினர் புலம்பி வருகின்றனர்.