மீந்து போன இட்லியை குப்பையில் போடுறீங்களா? இந்த மாதிரி மசாலா இட்லி செய்து சாப்பிடுங்க
மீந்து போன இட்லியை வைத்து மசாலா இட்லி அட்டகாசமான சுவையில் எவ்வாறு செய்து அசத்தலாம் என்பதை தெரிந்துகொள்வோம்.
உங்கள் வீட்டில் அடிக்கடி இட்லி சுடுவீர்களா? சிலசமயங்களில் இட்லியை அளவுக்கதிகமாக சுட்டு விடுகிறீர்களா? மீதமான இட்லியை என்ன செய்வதென்று தெரியாமல் தூக்கியெறிகிறீர்களா? இனிமேல் அந்த தப்பை செய்யாதீர்கள். மீதமான இட்லியை வைத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் சூப்பரான ஒரு டிபனை செய்யலாம்.
உங்கள் வீட்டில் மீந்து போன இட்லி இருந்தால் அதை வைத்து அடுத்தமுறை சூப்பரான மசாலா இட்லியை செய்யுங்கள். இந்த மசாலா இட்லி சுவையான காலை உணவாக மட்டுமின்றி, செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும். இதை மீந்து போன இட்லியில் மட்டும்தான் செய்ய வேண்டுமென்று அவசியமில்லை, அப்போது சுட்ட சூடான இட்லியிலும் செய்யலாம்.
உங்களுக்கு சுவையான மசாலா இட்லியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீந்து போன இட்லியைக் கொண்டு செய்யக்கூடிய மசாலா இட்லியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்
இட்லி - 5 -
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் - 1/4 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1/2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 1/2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பழுத்த தக்காளி - 2
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - 2 ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
இட்லி போடி - 2 ஸ்பூன்
பாவ் பாஜி மசாலா தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை - அலங்கரிக்க
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
சர்க்கரை - ஒரு சிட்டிகை
நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை
மீதமான இட்லியை சதுர துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். சீரகத்தை சேர்த்து தாளிக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து தாளிக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுது பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளி மற்றும் குடை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்றாக குழைந்ததும் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் பாவ் பாஜி மசாலாவை சேர்த்து நன்றாக கிளறவும்.
மசாலா பச்சை வாசனை போனதும் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் மசாலாவில் 1/4 கப் தண்ணீர் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிடவும்.
கடைசியாக இட்லி துண்டுகளைச் சேர்த்து, மசாலா அதன் மேல் நன்கு படியுமாறு மெதுவாகக் கலக்கவும்.
பின்னர் இட்லி பொடி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறவும். - இறுதியாக கொத்தமல்லி இலையை தூவி அடுப்பை அணைத்தால் சுவையான மசாலா இட்லி ரெடி!
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |