இரும்புச்சத்து நிறைந்த கோவக்காய் சட்னி... ஒருமுறை இப்படி செய்து சாப்பிடுங்க
இரும்புச்சத்து நிறைந்த கோவக்காயில் சட்னி எவ்வாறு செய்து சாப்பிடலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
காலையில் உங்கள் வீட்டில் தோசை சுட போகிறீர்களா? அந்த தோசைக்கு சும்மா நச்சுன்னு ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீங்களா? தினமும் ஒரே மாதிரி சைடு டிஷ் செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் கோவக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த கோவக்காயை வைத்து ஆந்திரா ஸ்பெஷல் கோவக்காய் சட்னியை செய்யுங்கள்.
ஆந்திராவில் உள்ள பெரும்பாலான வீடுகள் மற்றும் ஹோட்டல்களில் தோசை, இட்லிக்கு இந்த சட்னியை தான் அடிக்கடி செய்வார்கள். இந்த சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். இந்த சட்னி சுவையாக இருப்பது மட்டுமின்றி செய்வதற்கு மிகவும் எளிதாகவும் இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். அனைத்திற்கும் மேலாக இது மிகவும் ஆரோக்கியமானதும் கூட.
உங்களுக்கு ஆந்திரா ஸ்பெஷல் கோவக்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா கோவக்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
1 கப் நறுக்கிய கோவைக்காய்
5 வர மிளகாய்
2 டீஸ்பூன் எண்ணெய்
1 டீஸ்பூன் கடலைப்பருப்பு
1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
1 டீஸ்பூன் சீரகம்
சிறிய நெல்லிக்காய் அளவு புளி
2 ஸ்பூன் துருவிய தேங்காய்
தேவையான அளவு உப்பு
1 பெரிய வெங்காயம்
ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலைகள்
சிறிது கறிவேப்பிலை
தாளிக்க:
கடுகு - அரை ஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை
ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் கறிவேப்பிலை, பூண்டு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் புளி ஆகியவற்றைச் சேர்க்கவும்.
பருப்பு வகைகள் பொன்னிறமாக மாறும் போது, சீரகத்தைச் சேர்த்து அடுப்பை அணைத்துவிட்டு, கலவையை ஆறவிடவும்.
அதே கடாயில் கோவக்காயைச் சேர்த்து, மூடி வைத்து, மிதமான தீயில் 7 முதல் 8 நிமிடங்கள் வரை வேக வைக்கவும். பின்னர் இதையும் ஆற வைக்கவும்.
கோவக்காய் ஆறியதும் அதையும், வறுத்த பருப்பு வகைகளையும் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்க்கவும்.

பின்னர் தேங்காயைச் சேர்த்து மென்மையான விழுதாக அரைக்கவும். முக்கால் பாகம் அரைபட்டதும், பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து இதை கிண்ணத்துக்கு மாற்றவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னி மீது ஊற்றி நன்கு கிளறவும்.
அவ்வளவுதான் சுவையான ஆந்திரா ஸ்பெஷல் கோவக்காய் சட்னி ரெடி. இது இட்லி, தோசை மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |