வேகமெடுக்கும் காலரா! பீதியில் மக்கள்: காலராவின் அறிகுறிகள் என்னென்ன?
19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள உயிர்கொல்லி நோயான காலரா மீண்டும் தற்போது தலை தூக்க துவங்கியுள்ளது. ஆம், புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் காலரா நோய் பரவல் எதிரொலியாக அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 1600 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. அதில் சுமார் 700 பேர் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வரும் நிலையில், அதில் 17 பேருக்கு காலரா தொற்று நோய் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, காலரா நோய் உங்கள் பகுதியில் பரவக்கூடும் என்பதால் அதில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
சுகாதாரமற்ற தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் மூலம் காலரா பரவும்.
முதலில் தோன்றும் முக்கிய அறிகுறிகள் என்ன..?
வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றும். அதோடு ரத்த அழுத்தக் குறைவு, தாகம், கால் தசைப் பிடிப்புகள், சிறுநீரக செயலிழப்பு, மன அழுத்தம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
அசுத்தமான உணவு அல்லது தண்ணீரை உட்கொண்ட 12 மணி முதல் ஐந்து நாட்களுக்குள் அறிகுறிகள் தோன்றும் என்கின்றனர் மருத்துவர்கள். உதடுகள், கை, கால் தோல்கள் வறண்டு சுருக்கத்தோடு காணப்படும்.
தடுக்கும் வழிமுறைகள்:
குடிக்கும் நீரை கொதிக்க வைத்துப் பருக வேண்டும். பொது இடங்களிலும் ஹோட்டல்களில் சாப்பிடும் போது, முடிந்தால் கொஞ்சம் வெது வெதுப்பான தண்ணீர் கேட்டு வாங்கி பருகவும்.
வெளி இடங்களுக்கு சென்று வரும் போது நன்றாக கை, கால்களை கழுவி விட்டு உள்ளே வருவது அவசியம்.இறைச்சியை நன்றாக வேகவைத்து சமைத்து சாப்பிடவும்.
காய்கறி, பழங்களின் தோல்களை சீவிவிட்டு நன்றாக கழுவி பயன்படுத்தவும். சாப்பிடும் முன், தட்டுகளை நன்றாக கழுவிவிட்டு பயன்படுத்தவும் . வீட்டில் இருக்கும் போதும் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யவும்.
வீட்டிலோ அல்லது சுற்றத்திலோ யாருக்கேனும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டிருந்தால், கிருமி நாசினி மருந்துகளை தெளித்து சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பொதுவெளியில் மலம் கழிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். எப்போதும், பொதுக் கழிவறைகளையோ வீட்டுக் கழிவறைகளையோ மட்டும் பயன்படுத்தவும்.
யாருக்கேனும், வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனே அருகில் உள்ள மருத்துவமனைகளை அணுகி சிகிக்சை பெற்று கொள்வது அவசியம்.