அதிகரிக்கும் காலரா - தற்காத்துக்கொள்வது எப்படி? எச்சரிக்கை
இந்தியாவின் புதுச்சேரியின் காரைக்காலில் பொதுமக்களுக்கு காலரா, வயிற்றுப்போக்கு அறிகுறிகள் அதிகமாக காணப்படுவதால் அங்கு பொது சுகாதார அவசரநிலையை அரசு அறிவித்திருக்கிறது.
மக்களை பீதியில் உறைய வைத்திருக்கும் இந்த நோய் காரைக்காலில் சாக்கடை நீர் செல்லும் பகுதிகளின் குறுக்கே செல்லும் தண்ணீர் குழாயில் கசிவு ஏற்பட்டு, அதன் மூலமாகச் சாக்கடை நீர் தண்ணீரில் கலந்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுவரை 700 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெற்று வந்த 2 பேர் இணை நேய்களால் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
வாந்தி, வயிற்றுப்போக்கால் காரைக்காலில் இதுவரை 1,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காலரா நோய் தடுப்பு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைய வேண்டாம் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில், காலராவில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
அறிகுறிகள்
முதலில் வெளிப்படும் அறிகுறி என்றால் அது வயிற்றுப்போக்கு, வாந்தி தான். அதுமட்டுமின்றி ரத்த அழுத்தக் குறைவு, மயக்கம், காய்ச்சல், தாகம், கால் தசைப் பிடிப்புகள், அதிக வயிற்றுப்போக்கு, அதுவும் நீர் தன்மையோடு வெளியேறுதல் மற்றும் அமைதியின்மை ஆகியவை காலராவின் அறிகுறிகள்.
பின் அதிகப்படியான நீர் உடலில் இருந்து வெளியேறும். இந்த நீரிழப்பால் உடல் வறண்டு காணப்படும். உதடுகள் , கை , கால் தோல்கள் வறண்டு சுருக்கத்தோடு காணப்படும்.
சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும். அசுத்தமான உணவு அல்லது தண்ணீரை உட்கொண்ட 12 மணி முதல் ஐந்து நாட்களுக்குள் அறிகுறிகள் உருவாகின்றன.
முன்னெச்சரிக்கை
கார்ப்பரேஷன், கிராப்புற குழாய்களில் இருந்து தண்ணீர் பிடித்தாலும் சரி, கேன்களில் தண்ணீர் வாங்கினாலும் அதை நன்கு கொதிக்க வைத்து குடிக்கவும்.
பொது இடங்களில் பயணிக்கும் போதும் கையில் வெந்நீர் எடுத்துச்செல்வது நன்று. தவிர்க்க முடியாத சூழலில் தண்ணீர் பாட்டில் வாங்கும் போது சீல் உடைக்கப்படாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளவும்.
பொது வெளியில் சாப்பிடுவதை முடிந்தவரைக் குறைத்துக் கொள்ளவும். காய்கறி, பழங்களை நன்றாக கழுவிவிட்டு பயன்படுத்தவும். வெளியில் சென்று வரும்போது நன்றாக கை, கால்களை கழுவி விட்டு உள்ளே வருவது அவசியம்.
பற்களை நன்றாக துலக்க வேண்டும். சாப்பிடும் முன், தட்டுகளை நன்றாக கழுவிவிட்டு பயன்படுத்தவும்.
இறைச்சியை பாதி வேக்காடு போல் இல்லாமல் நன்றாக சமைத்து உண்ணவும். அடிக்கடி கைகளை சுத்தப்படுத்திக்கொள்ளவும்.