மனைவி, குழந்தையை பிரிந்த பிரதீப் ஆண்டனி.. உருக்கமான பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பிக் பாஸ் புகழ் பிரதீப் ஆண்டனி குழந்தையை பிரிந்து மிகுந்த துயரில் இருப்பதாக வெளியிட்டுள்ள உருக்கமாக பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
பிரதீப் ஆண்டனி
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகர் பிரதீப் ஆண்டனி. சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘அருவி’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கிய இவர், அதன்பிறகு ‘வாழ்’ திரைப்படத்திலும் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

நடிகர் கவினின் நெருங்கிய நண்பராகவும் அறியப்படும் பிரதீப் ஆண்டனி, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 7வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். ஏற்கனவே திரைப்படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிதான் அவரை அதிகளவில் மக்களிடம் கொண்டு சேர்த்தது.
நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி வெளிப்படையாகப் பேசிய விதமும், தனது கருத்துகளை தயக்கமின்றி முன்வைத்த விதமும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது.
அதே நேரத்தில், அவரது செயல்பாடுகள் நிகழ்ச்சிக்குள் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தின. குறிப்பாக, சில பெண் போட்டியாளர்கள் பிரதீப் ஆண்டனி மீது புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது.
இதையடுத்து அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிரதீப்புக்கு ரெட் கார்டு வழங்கி வெளியேற்றப்பட்ட முடிவு அப்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. பலரும் பிக்பாஸ் குழுவின் முடிவுக்கு எதிராக தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர்.

பிரதீப்பை வெளியேற்றியது தவறான முடிவு என்றும், அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை என்றும் சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர்.
மனைவி குழந்தையை பிரிந்தது ஏன்?
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதீப் ஆண்டனி தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். கடந்த 2024ஆம் ஆண்டு பூஜா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு தனது குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்தி வந்த பிரதீப்புக்கு, கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறந்த செய்தி பிரதீப்பின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான ஒரு பதிவு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

உருக்கமான பதிவு
பிரதீப் ஆண்டனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நீண்ட பதிவில், தனது மனைவி மற்றும் குழந்தையை பிரிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். தனது வாழ்க்கையின் மிகப்பெரிய கனவு குறித்து அவர் அந்த பதிவில் உருக்கமாக பேசியுள்ளார்.
ஒரு நல்ல குடும்பத்தை அமைத்துக்கொண்டு, தனது குழந்தைக்கு சிறந்த தந்தையாக வாழ வேண்டும் என்பதுதான் தனது வாழ்நாளின் மிகப்பெரிய கனவு என்று பிரதீப் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக தற்போது இணைந்து வாழ்வது மிகவும் கடினமாகிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது குழந்தையின் மீது அளவுகடந்த அன்பு வைத்திருப்பதாகக் கூறியுள்ள பிரதீப், குழந்தையை பிரிந்திருப்பது தனக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
“ஒவ்வொரு நொடியும் என் குழந்தையை ரொம்பவே மிஸ் பண்றேன்” என்று அவர் தனது பதிவில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். பிரதீப்பின் இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
குடும்ப வாழ்க்கை குறித்து பிரதீப் ஆண்டனி வெளியிட்டுள்ள இந்த பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வரும் நிலையில், அவரது தற்போதைய நிலை குறித்து ரசிகர்கள் பலரும் வருத்தத்தையும் ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |