இரவு உணவு சாப்பாட்டுக்கு பின்னர் 10 நிமிட நடைப்பயிற்சி அவசியம் ஏன்?
10 Mins Walking After Eating: இன்றைய காலகட்டத்தில் இரவு உணவை பெரும்பாலானவர்கள் தாமதமாக சாப்பிடுகின்றனர், அதுவும் மிட் நைட் பிரியாணி பல நகரங்களில் டிரெண்டாகி வருகிறது.
ருசிக்காக அதை சாப்பிட்டாலும் அதனால் ஏற்படும் பின்விளைவுகள் அதிகம்.
இரவு உணவு என்பது 7-8 மணிக்குள் சாப்பிட்டு முடித்தாக வேண்டும், இதுவே ஆரோக்கியமான பழக்கம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அதிலும் முக்கியமாக இரவு உணவை முடித்தபின், அப்படியே அமர்ந்திருக்காமல் குறைந்தது 10 நிமிடமாவது மிதமான நடைப்பயிற்சி செய்தாக வேண்டும்.

இது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா?
இரவு உணவை முடித்தவுடன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்கும், அதாவது கார்போஹைட்ரேட்டுகள் செரிமானம் ஆகும் போது குளுக்கோஸ் ரத்தத்தில் கலக்கத் தொடங்குகிறது.
உணவின் அளவு, கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம் ஆகியவற்றை பொறுத்து சர்க்கரை அளவு அதிகபட்சத்தை அடையும் நேரம் மாறுபடலாம்.

அதுவே நாம் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது தசைகள் தொடர்ந்து வேலை செய்வதால் அதற்கு தேவையான ஆற்றலை நம் உடல் எடுத்துக்கொள்ளும்.
இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பது குறையும், இதற்காக வேகமாக நடப்பதோ ஓடுவதோ அவசியமில்லை, மிதமான நடைப்பயிற்சியே போதுமானது.
உணவை முடித்தபின்னர் 10 நிமிடங்கள் காத்திருந்து மிதமான நடைப்பயிற்சியை தொடங்கலாம்.