உலகையே இணைத்த அதிசயம் - இன்டர்நெட்டை உருவாக்கியவர் யார்ன்னு தெரியுமா?
இன்றைய உலகில் இணையம் நமது அன்றாட வாழ்க்கையின் முக்கிய அங்கமாகிவிட்டது. தகவல் தொடர்பு, கல்வி, வணிகம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் இணையத்தைச் சார்ந்தே உள்ளன. இணையத்தை தவிர்த்து தற்கால வாழ்க்கையை கற்பனை கூட செய்யமுடியாது என்றால் மிகையாகாது.
ஆனால், இணையம் எப்போது உருவானது, அதை கண்டுபிடித்தவர் யார் என்பது குறித்து பலருக்கும் தெரியாது. இணையம் உருவாக்கப்பட்ட சுவாரஸ்ய பின்னணி குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இணையம் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
இணையம் ஒரு தனி விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டதல்ல.பல விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் நீண்டகால முயற்சிகளின் விளைவாக அது உருவானது.

இருப்பினும் இந்த உருவாக்கத்திற்கு அடிப்படை வடிவமைப்பை உருவாக்கிய முக்கிய நபராக வின்டன் செர்ஃப் (Vinton Cerf) விளங்குகிறார்.
வின்டன் கிரே செர்ஃப் (Vinton Gray Cerf) 1943ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி அமெரிக்காவில் பிறந்தார். சிறு வயதிலிருந்தே அறிவியல் மற்றும் கணிதத்தில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.
அவருக்கு கேள்வித் திறனில் சிறிய குறைபாடு இருந்தபோதிலும், அதனை தடையாக எண்ணாமல், 'கணினிகள் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொண்டு தகவல்களை பரிமாற முடியுமா?' என்ற கேள்வி எழுந்தது. இந்த சிந்தனையே பின்னாளில் இன்டர்நெட்டின் உருவாக்கத்திற்கு வி்த்திட்டது.

1900-களின் தொடக்கத்திலேயே நிகோலா டெஸ்லா உலகளாவிய வயர்லெஸ் தகவல் தொடர்பு அமைப்பு குறித்து தொலைநோக்குப் பார்வையை முன்வைத்திருந்தார்.
1960-களில் கணினி வலைப்பின்னல்கள் மூலம் தகவல்களைப் பகிரும் நடைமுறை முயற்சிகள் தொடங்கின. இதன் முக்கிய முன்னேற்றமாக, அமெரிக்க பாதுகாப்புத் துறையின் ஆதரவுடன் Advanced Research Projects Agency Network (ARPANET) உருவாக்கப்பட்டது.
1969 அக்டோபர் 29 அன்று, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலிருந்து ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்திற்கு முதல் தகவல் அனுப்பப்பட்டது. இது இணையத்தின் ஆரம்பகால செயல்பாட்டு வடிவமாகக் கருதப்படுகிறது.
பின்னர் ராபர்ட் கான் மற்றும் வின்டன் செர்ஃப் ஆகியோரின் முயற்சியால் பல்வேறு கணினி வலைப்பின்னல்களுக்கு இடையே தகவல்களைப் பரிமாறுவதற்கான TCP/IP தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது.
1983 ஜனவரி 1 அன்று ARPANET இந்த முறையை ஏற்றுக்கொண்டது. இந்த நாள் நவீன இணையத்தின் தொடக்க நாளாகப் பொதுவாகக் கருதப்படுகின்றது.
World Wide Web என்றால் என்ன?

அதேவேளை, World Wide Web (WWW) என்பது இணையத்துடன் ஒன்றல்ல. 1990-ல் டிம் பெர்னர்ஸ்-லீ உருவாக்கிய WWW, இணையத்தில் உள்ள தகவல்களை வலைத்தளங்கள் மற்றும் ஹைப்பர்டெக்ஸ்ட் இணைப்புகள் மூலம் எளிதாக அணுகுவதற்கான ஒரு அமைப்பாகும்.
இந்தியாவில் பொது மக்களுக்கான இணையச் சேவை 1995 ஆகஸ்ட் 15 அன்று VSNL மூலம் தொடங்கப்பட்டது. அப்போது இணைய சேவை மிகவும் விலை உயர்ந்ததாகவும் வேகம் குறைவாகவும் இருந்தது.

9.6 kbps இணைப்புக்கே ஆண்டுக்கு சுமார் ரூ.15,000 செலவாகியதால், ஆரம்பத்தில் இணைய வசதி பெரும்பாலும் பெரிய நிறுவனங்கள் மற்றும் வசதி படைத்தவர்களுக்கே கிடைத்தது.
இவ்வாறு பல ஆண்டுகளாக நடைபெற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் விளைவாக உருவான இணையம், இன்று உலகையே இணைக்கும் மிகப்பெரிய தகவல் தொடர்பு வலையமைப்பாக வளர்ச்சிகண்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening