பப்ஜி விளையாட்டால் ஏற்பட்ட தகராறு.. 4 நண்பர்கள் சேர்ந்து இளைஞரை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்!
பப்ஜி விளையாட்டால் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவர் 4 நண்பர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த நாச்சிக்குளத்தை சேர்ந்தவர் இஷ்ரத் (22). அதே பகுதியை சேர்ந்தவர் வாகித் (20). நண்பர்களான இவர்கள் அடிக்கடி செல்போனில் பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளனர்.
ஏற்கனவே இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதனிடையே, வாகித் தனக்கு புது செல்போன் ஒன்று விலைக்கு வாங்கி தருமாறு இஷ்ரத்திடம் கேட்டுள்ளார்.
அதற்கு மன்னார்குடியில் உள்ள தனது நண்பர் கடையில் போன் வாங்கி தருவதாக இஷ்ரத் தனது பைக்கில் வாகித்தை அழைத்து சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து, மன்னார்குடிக்கு வந்த இருவரிடையே பழைய பிரச்சனை தொடர்பாக தகராறு நடந்துள்ளது.
இதில் வாகித் , இஷ்ரத்தை சரமாரியாக தாக்கினார். பின்னர் நாச்சிக்குளத்தில் இருக்கும் தனது நண்பர்களான தீன் (24), அப்துல் பாசித் (20), மப்ரூக் (24) ஆகிய மூவரை வரவழைத்துள்ளார்.
இதன் பின்னர் அருகில் உள்ளசுடுகாட்டு பகுதியில் வைத்து இஷ்ரத்தை மீண்டும் தாக்கினர். பின்னர் நான்கு பேரும் சேர்ந்து இஷ்ரத்தை கத்தி மற்றும் பீர் பாட்டிலை உடைத்து சரமாரியாக குத்தியதில் இஷ்ரத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இஷ்ரத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக திருவாருர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் மன்னார்குடி வந்து சம்பவம் தொடர்பாக விசாரனை நடத்தினார். மேலும் வழக்குப்பதிவு செய்து வாகித், தீன், அப்துல் பாசித், மப்ருக் ஆகிய 4 பேரையும் விசாரணைக்கு அழைத்து சென்றனர். பிடிபட்ட நபர்களிடம், டிஎஸ்பி இளஞ்செழியன் தீவிர விசாரனை நடத்தி வருகிறார்.