80 அடி மலையின் உச்சியில் இருந்து விழுந்த இளம்பெண் - உயிர் பிழைத்த அதிசயம்!
80 அடி உயரத்தில் இருந்து விழுந்த இளம்பெண் உயிர்பிழைத்த அதிசயம், அனைவரையும் ஆச்சர்யபட வைத்துள்ளது.
இங்கிலாந்தின் லிவர்பூலின் புறநகர்ப் பகுதியான ஐக்பர்த்தைச் சேர்ந்தவர் காரா சட்டன்(26). கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட இவர், தனது காதலர் ஜேம்சுடன்(25) விடுமுறையை கொண்டாட சைக்கிளிலேயே நார்த் வேல்ஸில் உள்ள கோட்-ஒய்-ப்ரெனின் என்ற இடத்தில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு சென்றார்.
இதனிடையே, அங்கு மழை உச்சியின் ஒரத்தில் நின்று, இயற்கையின் அழகை ரசித்துகொண்டிருக்கும்போது, நிலைதடுமாறி மலை உச்சியில் இருந்து சைக்கிளோடு கீழே விழுந்துள்ளார்.
இதனைக்கண்டு பதறிய காதலன், அவரை காப்பாற்ற கத்திக்கூச்சலிட சுமார் 5 மீட்டர் தூரத்தில் மருத்துவ ஊழியர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். உடனடியாக அந்த மருத்து ஊழியர் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதிர்ஷ்டவசமாக தலையில் அணிந்திருந்த ஹெல்மெட்டை கழட்டாத காரணத்தால், காரா சட்டன் உயிருடன் விமான ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும், காலில் எலும்பு முறிவு, இடுப்பு எலும்பு முறிவு, மற்றும் நுரையீரல் என பல பகுதிகளில் அடிப்பட்டாலும், அவர் உயிர் பிழைத்துள்ளார்.
தற்போது 2 மாத சிகிச்சைக்கு பின் மெல்ல மெல்ல நடக்க ஆரம்பித்துள்ளார்.