இவர் கத்ரீனா கைஃப் தானா? உடல் எடை விமர்சனத்துக்கு கத்ரீனா அளித்த நெத்தியடி பதில்!
பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப்பின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவதுடன், அவரது உடல் எடை குறித்து விமர்சனங்களும் எழுந்துள்ளது.
அவரது தோற்றத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து ரசிகர்கள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வரும் நிலையில், அவர் அளித்துள்ள பதில் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பிரசவத்துக்குப் பிறகு தனது உடல் மற்றும் சருமத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து கத்ரீனா மனம் திறந்து பேசியுள்ளார்.

நடிகை கத்ரீனா கைஃப்
2003ஆம் ஆண்டு வெளியான ‘பூம்’ திரைப்படம் மூலம் பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமானவர் கத்ரீனா கைஃப். தொடர்ந்து ஷாருக்கான், சல்மான் கான், ஆமீர்கான், ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
குறிப்பாக, ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியான ‘அக்னிபத்’ திரைப்படத்தில் கத்ரீனா ஆடிய நடனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேபோல், ஆமீர்கானுடன் இணைந்து நடித்த ‘தூம் 3’ திரைப்படத்திலும் அவரது நடனம் வெகுவாகப் பேசப்பட்டது.

கத்ரீனா கைஃப் கடைசியாக விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘மெரி கிறிஸ்துமஸ்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவரது நடிப்பில் எந்தப் புதிய திரைப்படமும் வெளியாகவில்லை. இதனால் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவரை வெள்ளித்திரையில் ரசிகர்கள் காண முடியவில்லை.
இதற்கிடையே, 2021ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் விக்கி கௌஷலை திருமணம் செய்துகொண்ட கத்ரீனா கைஃப், கடந்த ஆண்டு இறுதியில் ஆண் குழந்தைக்கு தாயானார்.

அந்தக் குழந்தைக்கு விஹான் கௌஷல் என பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிரசவத்துக்குப் பின்னர் கத்ரீனாவின் உடல் எடையில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் அவரது தோற்றத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளது
சமீபத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கத்ரீனா கலந்துகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.
விமர்சனத்துக்கு கத்ரீனா அளித்த பதில்
அந்தப் புகைப்படங்களைப் பார்த்த சில ரசிகர்கள், “இவர் கத்ரீனா கைஃப் தானா?” என ஆச்சரியத்துடன் கருத்துகளைப் பதிவிட்டனர். அதேவேளை, அவரது தோற்றம் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் எழுந்தன.

இந்நிலையில், தன் மீதான விமர்சனங்கள் குறித்து அண்மைய பேட்டி ஒன்றில் பேசிய கத்ரீனா, பிரசவத்துக்குப் பிறகு தனது சருமம் மிகவும் சென்சிட்டிவாக மாறியதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “பிரசவத்துக்குப் பிறகு என்னுடைய சருமம் மிகவும் சென்சிட்டிவாக மாறிவிட்டது. எனது சருமத்துக்கு எது சிறந்தது என்பதை கண்டுபிடிப்பது எனக்கு சவாலாக இருந்தது. என் சருமத்துக்கு இதமளிக்கும் மற்றும் புத்துணர்வு தரும் பொருட்களைத் தேடி கண்டுபிடித்தேன்” என தெரிவித்துள்ளார்.

மேலும், தனது உடல் எடை குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றியும் கத்ரீனா பேசியுள்ளார். “நான் மாடலிங் துறையில் நுழைந்தபோது, அழகு என்பதற்கு பல்வேறு வரையறைகளும் அளவுகோல்களும் இருந்தன. என்னைப் பொறுத்தவரை, சிறந்த தோற்றத்துடன் இருப்பது எனக்கு நல்ல உணர்வைத் தருகிறது.
ஒருவர் ஆரோக்கியமாக உணரும்போது, அந்தத் தன்னம்பிக்கை இயல்பாகவே வெளிப்படும் என்று நான் நினைக்கிறேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார். கத்ரீனாவின் இந்தப் பேச்சும், அவரது சமீபத்திய புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் கவனம் ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |