Heart Attack ஏற்பட்டவுடன் என்ன செய்ய வேண்டும்? மருத்துவரின் விளக்கம்
Heart Attack மாரடைப்பு ஏற்பட்டவுடன் என்ன செய்ய வேண்டும் என்பதை Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா அவரது பேஸ்புக் பக்கத்தில் விவரித்துள்ளார்.
அந்த பதிவு,
இடது பக்க நெஞ்சுப் பகுதியில் நெஞ்சுப் பகுதியில் தாடை / வயிற்றுப் பகுதியில் / இடது பக்க கை ( புஜம்) ஆகியவற்றில் திடீரென தீவிரமான "இதுவரை அனுபவித்திராத" வலி ஏற்பட்டாலோ கூடவே குப்பென வியர்த்துப்போய் செயல் திறன் குறைந்து தலை சுற்றல் ஏற்படுவது போல உணர்ந்தாலோ இதயத்துடிப்பு அதிகரிப்பது போலவோ குறைவது போலவோ உணர்ந்தாலோ வந்திருப்பது ஹார்ட் அட்டாக்காக இருக்கலாம்.இதயத்திற்கு ஊட்டமளிக்கும் முக்கிய தமனியில் திடீரென அடைப்பு ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.
அடுத்து என்ன செய்ய வேண்டும்?
வந்திருப்பது இதய ரத்த நாள அடைப்பு தானா? என்பதை உடனே உறுதி செய்ய வேண்டும். ஆஞ்சியோ மற்றும் ரத்தக் கட்டியைக் கரைக்கும் வசதி உள்ள மருத்துவமனைக்குச் செல்லுமுன் லோடிங் டோஸ் எனப்படும் இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டவர்களுக்கான முதல் சிகிச்சை மாத்திரைகள் - ஆஸ்பிரின் (ASPIRIN) 300 மில்லிகிராம் க்ளோபிடோக்ரெல் (CLOPIDOGREL) 300 மில்லிகிராம் (அல்லது) டிக்கக்ரெலார் ( TICAGRELOR) 180 மில்லிகிராம். அடோர்வாஸ்டாட்டின் ( ATORVASTATIN) 80 மில்லிகிராம் விழுங்க வேண்டும்.
ஒருவேளை வந்தது இதய அடைப்பாக இல்லாமல் போனது பின்னால் தெரிய வந்தாலும் லோடிங் டோஸ் உட்கொண்டதால் இளையோருக்கு பெரிய பாதகங்கள் இல்லை.
முதியவர்களுக்கும் ஏற்கனவே இரைப்பை புண் இருப்பவர்களுக்கும் உதிரப் போக்கை ஏற்படுத்தலாம். கூடவே கல்லீரல் நோய், ரத்த உறைதல் குறைபாடு இருப்பவர்கள் லோடிங் டோஸை மருத்துவர் அறிவுரையின் பேரில் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.இதை கருத்தில் கொள்ள வேண்டும்.
வந்தது இதய ரத்த நாள அடைப்பாக இருப்பின் இந்த லோடிங் டோஸ் உயிர்காக்கும் விதத்தில் செயல்பட்டு நமக்கான கோல்டன் ஹவரை நீட்டிக்கச் செய்யும். அதற்காக லோடிங் டோஸை போட்டு விட்டு வீட்டில் படுத்து விடக்கூடாது.
அடுத்து என்ன செய்ய வேண்டும்?
ஈசிஜி எடுக்க அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். முடிந்த அளவு நடக்காமல் படுத்துக் கொண்டே இன்னொருவர் அழைத்துச் செல்வது நல்லது.
இதயத்துக்கு கூடுதல் சிரமத்தைக் குறைக்கும். ஈசிஜி - நார்மலாக இருப்பின் இதயத்தின் தசைகள் காயமுறும் போது வெளிப்படுத்தும் ட்ரோபோனின் நொதியைப் பரிசோதனை செய்ய வேண்டும்.
காரணம் ஈசிஜி இல் மாற்றம் தெரியாமல் ஏற்படும் ரத்த நாள அடைப்பும் உள்ளது. சில நேரங்களில் முதலில் எடுக்கும் ஈசிஜி நார்மலாக இருக்கும். இடைவெளி விட்டு பிறகு எடுக்கும் ஈசிஜியில் மாற்றங்கள் தெரியலாம்.
எனவே மருத்துவர் அட்மிட் ஆகச் சொன்னால் அட்மிட் ஆகி இன்னும் சில மணிநேரங்கள் தங்கி இருந்து அடுத்தடுத்த ஈசிஜிக்களை பார்த்த பிறகு வீட்டுக்கு வர வேண்டும்.
இதயத்தின் தசைகளின் காயத்தைக் கூறும் ட்ரோபோனின் அளவுகளும் நார்மல் என்றால் எக்கோகார்டியோகிராம் எனும் இதயத்தின் தசைகள் எவ்வாறு பணி புரிகின்றன? என்பதை ஆராயும் பரிசோதனை செய்யப்பட்டும்.
எக்கோவும் நார்மல் அடுத்தடுத்து எடுக்கப்பட்ட ஈசிஜியும் நார்மல் என்றால் கவலைப்பட ஒன்றுமில்லை.
டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்துவிடலாம் இதுவே ஈசிஜி அசாதாரணமாக இருந்து அல்லது ட்ரோபோனின் அளவுகள் கூடுதலாக இருந்தால் வந்திருப்பது இதய ரத்த நாள அடைப்பு என்பதை அறிந்து தற்கால வழிமுறைப்படி மாரடைப்பு ஏற்பட்டவுடன் ஆஞ்சியோப்ளாஸ்டி செய்து அடைப்பு ஏற்பட்ட பகுதியில் ஸ்டெண்ட் வைப்பது மிகச்சிறந்த நடைமுறை.
ஒருவேளை உங்களால் ஒரு மணிநேரத்திற்குள் இத்தகைய ஆஞ்சியோப்ளாஸ்டி செய்யும் நவீன வசதி கொண்ட அரசு/ தனியார் மருத்துவமனைக்கு விரைந்திட முடிந்தால் அங்கு செல்வது சிறந்தது. ஆயினும் மாரடைப்பு ஏற்பட்ட முதல் மூன்று மணிநேரங்களுக்குள் செய்யப்படும் த்ராம்போலைசிஸ் எனும் ரத்தக்கட்டியை கரைக்கும் சிகிச்சை ஆஞ்சியோப்ளாஸ்ட்டிக்கு ஒப்பானது.
மாரடைப்பு ஏற்பட்டவருக்கு எந்த சிகிச்சையும் அளிக்காமல் ஆஞ்சியோ வசதி கொண்ட பெரிய நகருக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டு வழியில் அதிகம் பேர் உயிரிழப்பதை அறிய முடிகிறது.
ஆஞ்சியோப்ளாஸ்டி செய்யும் கேத் லேப் வசதி அருகில் அமையப்பெறாதவர்களும், ரத்தக் கட்டியை கரைக்கும் த்ராம்போலைசிஸ் சிகிச்சை அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் பன்னோக்கு மருத்துவமனைகளில் உள்ளன.
அதை உங்கள் ஊரிலேயே முதலில் செய்து கொள்ளுங்கள். இவ்வாறு ரத்தக்கட்டியை கரைத்து இதயத்தின் ரத்த ஓட்டத்தை மீட்டெடுத்த பிறகு கேத் லேப் வசதி கொண்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு ஆஞ்சியோ செய்யப்பட்டு அடைப்புக்கு ஏற்றவாறு தேவைப்பட்டால் ஸ்டெண்ட் வைத்துக் கொள்ளலாம் அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படலாம்.
ஆஞ்சியோப்ளாஸ்டியோ த்ராம்போலைசிஸோ எத்தனை விரைவாக செய்கிறோமோ அத்தனை சதவிகிதம் சிறப்பான வெற்றி கிட்டும்.
உயிர் பிழைக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும். மாரடைப்பு ஏற்பட்ட ஒரு மணிநேரத்திற்குள் முதல் அதிகபட்சம் மூன்று மணிநேரத்திற்குள் ரத்தக்கட்டியை கரைக்கும் THROMBOLYSIS அல்லது ஆஞ்சியோப்ளாஸ்டி செய்யப்பட வேண்டும்.
மாரடைப்பு ஏற்படும் தருணத்தில் நீண்ட தூரத்தில் இருக்கும் மருத்துவமனைகளை ஆஞ்சியோ செய்வதற்கு அடையும் முன் தாங்கள் வாழும் ஊரில் ரத்தக்கட்டியை கரைக்கும் சிகிச்சை அளிக்கும் அரசு & தனியார் மருத்துவமனைகள் இருப்பின் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆஞ்சியோ வசதி உள்ள கேத் லேப் இருக்கும் மருத்துவக் கல்லூரிகள் & மருத்துவமனைகள் நிறைந்த பேரூர்களில் வசிப்பவர்கள் அந்த வசதிகளை உபயோகப்படுத்தி நேரடியாக ஆஞ்சியோ செய்து கொள்ள வேண்டும். தாமதம் உயிரைக் கொல்லும் விரைவில் சிகிச்சை அளிப்பது இதயத்தின் தசைகளை உயிர்ப்பிக்கும்... உயிரை மீட்கும் செயலாகும்.
நன்றி
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
