நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை காக்கும் காளான் பட்டாணி மசாலா ! எப்படி செய்வது?
அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களும் ரசிக்கும் சைவ உணவுகளில் காளான் தனக்கென ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இறைச்சியைப் போன்ற தனித்துவமான சுவை மற்றும் மென்மையான அமைப்பைக் கொண்ட காளான், பலரின் விருப்பமான உணவுப் பொருளாக காணப்படுகின்றது..
சுவை மட்டுமல்லாமல், காளானில் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. குறிப்பாக ரிபோஃப்ளேவின் (Vitamin B2), நியாசின் (Vitamin B3), பாந்தோத்தேனிக் அமிலம் (Vitamin B5), பயோட்டின் (Vitamin B7) போன்ற முக்கியமான பி-வகை வைட்டமின்கள் இதில் காணப்படுகின்றன.

இந்த வைட்டமின்கள் உடலில் ஆற்றல் உற்பத்தி மற்றும் வளர்சிதை மாற்ற செயல்பாடுகளுக்கு உதவுவதுடன், நரம்பு மண்டலத்தின் சீரான செயல்பாடு மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இத்தனை ஆரோக்கிய நன்மைகள் கொண்ட காளானுடன், புரதச்சத்து நிறைந்த பட்டாணியையும் சேர்த்து சுவையும் சத்தும் நிறைந்த அற்புதமான காளான் பட்டாணி மசாலா எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.அதனை சாதம், ரொட்டி, சப்பாத்தி, நாண் என இந்த உணவுடன் சேர்த்து சாப்பிட்டாலும் சுவை பக்காவாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
½ கப் வேகவைத்த பச்சை பட்டாணி
200 கிராம் காளான்
2 ஸ்பூன் நெய்
½ ஸ்பூன் சீரகம்
1 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்
1 பச்சை மிளகாய் (கீறியது)
1 ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
½ கப் அரைத்த தக்காளி
தேவையான அளவு உப்பு
1 ஸ்பூன் கரம் மசாலா
¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
1 ஸ்பூன் மல்லித் தூள்
1 ஸ்பூன் மிளகாய் தூள்
2 ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை

செய்முறை
முதலில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நன்றாகக் கழுவி நறுக்கி வைத்துக்கொள்ளவும். தக்காளியை அரைத்து விழுதாக தயார் செய்து கொள்ள வேண்டும்.
காளான்களையும் சுத்தம் செய்து தனியாக வைத்துக்கொள்ளவும். மசாலாவில் சேர்க்கும் போது அவற்றை தேவையான அளவில் நறுக்கிக் கொள்ளலாம்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடாக்கி, அதில் சீரகம் சேர்த்து பொரிய விடவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும்.

அடுத்து இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து, அதன் பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும். பின்னர் அரைத்த தக்காளி மற்றும் உப்பு சேர்த்து, தக்காளி நன்கு வதங்கி எண்ணெய் பிரியும் வரை சமைக்கவும்.
இப்போது கரம் மசாலா, மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து, மசாலாவின் பச்சை வாசனை நீங்கி நல்ல மணம் வரும் வரை வதக்கவும்.
அதன்பின் வேகவைத்த பட்டாணி மற்றும் நறுக்கிய காளானை சேர்த்து, மிதமான தீயில் 4 முதல் 5 நிமிடங்கள் வதக்கவும். மூடி வைத்து, காளான் மென்மையாகும் வரை குறைந்த தீயில் வேகவிடவும்.
இடையிடையே கிளறி விடவும். காளான் வேகும்போது அதிலிருந்து தண்ணீர் வெளியேறும் என்பதால் அதிகமாக தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியமில்லை.
காளான் நன்றாக வெந்ததும் மூடியைத் திறந்து, அதிக தீயில் ஒரு நிமிடம் கிளறி வதக்கவும். கிரேவி தேவையான அளவு கெட்டியானதும் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி கிளறிவிட்டு இறக்கினால், அவ்வளவு தான் சுவையான காளான் பட்டாணி மசாலா தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |