பசுமை பட்டாசு என்றால் என்ன? இந்த தீபாவளிக்காவது கிடைக்குமா? முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க....!
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டதால், பட்டாசு வெடிக்க அரசு எவ்வளவு மணிநேரம் அனுமதி வழங்கப்படும், பண்டிகை கொண்டாட முடியுமா முடியாதா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
ஆனால், உச்ச நீதிமன்றம் இந்தியா முழுவதும் பட்டாசு விற்பனையைத் தடை செய்யமுடியாது என்று அண்மையில் தீர்ப்பு வழங்கி சில நிபந்தனைகளுடன் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இரவு 8 மணி முதல் துவங்கி 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக அதிகப்படியான சத்தம் மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மக்களுக்குப் பசுமை பட்டாசு என்றால் என்ன? அது எங்கு வாங்கக் கிடைக்கும்? அதை எப்படி வாங்குவது என்பது போன்ற பல புதிய சந்தேகத்திற்குரிய கேள்விகள் எழுந்துள்ளது.
பசுமை பட்டாசு என்பது தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனமான 'நீரியின் (NEERI) கண்டுபிடிப்பு என்று கூறப்பட்டுள்ளது. NEERI என்பது அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் என்று அழைக்கப்படும் CSIR கீழ் வரும் ஒரு அரசு நிறுவனமாகும்.
மேலும், பசுமை பட்டாசுகளுக்கும், வழக்கமான பட்டாசுகளைப் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகத் தான் காட்சியளிக்கின்றன. இருந்தாலும், பசுமை பட்டாசுகள் வெடிக்கும் போது குறைவான ஒலியுடன் குறைந்த மாசுடன் வெடிக்கிறது என்பதே இவ்விரண்டு பட்டாசுகளுக்கும் இடையில் உள்ள ஒரு முக்கிய வேறுபாடாகும்.
பசுமை பட்டாசுகளும், சாதாரண பட்டாசுகளைப் போலவே இருக்கும் என்பதால் இதை மக்கள் அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படலாம். பசுமை பட்டாசில் இயற்கைக்குத் தீங்கு விளைவிக்கும் நஞ்சு பொருட்கள் மற்றும் மாசு ஏற்படுத்தும் வாயுவை உருவாக்கும் பொருட்களின் சதவீதம் சுமார் 40% முதல் 50% குறைவாக இருக்கிறது.
சாதாரண பட்டாசுகள் இயற்கைக்குத் தீங்கான பல நஞ்சுகளைக் காற்றில் மாசுவாக பரப்புகிறது. ஆனால், பசுமை பட்டாசுகள், 50% வரை குறைவான மாசை வெளியிடுவதன் காரணமாக, பசுமை பட்டாசுகளைப் பயன்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இது முற்றிலும் பாதுகாப்பானது என்று நாம் கூறிவிட முடியாது, இருப்பினும் இதன் தாக்கம் குறைவாகவே இருக்கிறது. இந்த பசுமை பட்டாசு வெடித்தவுடன் நீராக மாறிவிடும் தன்மை கொண்டதாம். எது பட்டாசு வெடித்தால் நீராக மாறுமா? இது என்னப்பா புது கதையா இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம்.
ஆனால், இது தான் உண்மை, NEERI மேற்கொண்ட பலகட்ட ஆராய்ச்சியின் முடிவாக இந்த வாட்டர் ரிலீசர் பட்டாசுகளை நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது வெடிக்கும் போது, கரியாக மாறுவதற்குப் பதிலாக நீராக மாறுகிறது. பட்டாசில் உள்ள சல்ஃபர் மற்றும் நைட்ரஜன் வாயுக்கள் நீரில் கரைந்துவிடும்.
இந்த வகை பட்டாசுக்கு NEERI 'வாட்டர் ரிலீசர்' என்று பெயரிட்டுள்ளது. நீரி இந்த வகை நீர் பட்டாசை உருவாக்க முக்கிய காரணம் ஒன்று உள்ளது, மாசை குறைக்கும் முக்கியமான காரணியாகத் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
இந்த பசுமை பட்டாசுகளை எங்கு நாங்கள் வாங்கலாம் என்ற கேள்வி உங்களுக்கு எழுந்திருக்கும். உண்மையைச் சொல்லப்போனால் நீரியின் பசுமை பட்டாசுகள் தற்போது இந்தியச் சந்தையில் கிடைக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது. காரணம், 'நீரி' இந்த பசு வகைகளை இப்போது தான் கண்டுபிடித்துள்ளது.
இதற்குப் பின்னர், இதை நீரி உருவாக்கி, இதன் தரம் மற்றும் மாசு குறைப்பு போன்ற அம்சங்களை அரசிடம் நிரூபித்து சான்றிதழ் பெற வேண்டும். இதற்குப் பின்னர் தான் இது விற்பனைக்குக் கொண்டுவரப்படும்.
இந்த முயற்சி வெற்றிபெற்றால் இந்தியா தான் பசுமை பட்டாசு பயன்படுத்திய முதல் உலக நாடாக இருக்கும்.