சுடச் சுட வடகறி செய்வது எப்படி?
வடகறி என்பது மிகவும் பிரபலமான ஒரு தென்னிந்திய ரெசிபி.
இந்த வடகறி இட்லி, தோசை, இடியாப்பம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
இந்த வடகறி ரெசிபியை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலைப் பருப்பு - 1 கப் (நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து கொள்ளவும்)
- சோம்பு - 1 டீஸ்பூன்
- வரமிளகாய் - 2
- உப்பு - சுவைக்கேற்ப
- தக்காளி - 2 (நறுக்கியது)
- வெங்காயம் - 1 (நறுக்கியத)
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
- மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
- கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
- எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
- பட்டை - 1 இன்ச்
- கிராம்பு - 2
- பிரியாணி இலை - 1
- பச்சை மிளகாய் - 1
- கறிவேப்பிலை - சிறிது
செய்முறை
முதலில் தக்காளியை நீரில் போட்டு வேக வைத்து எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஊற வைத்துள்ள கடலைப் பருப்பை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் வரமிளகாய் மற்றும் சோம்பு சேர்த்து கொரகொரவென்று அரைத்து இறக்கி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அரைத்த கடலைப் பருப்பு கலவையை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, வடை போன்று தட்டி இட்லி தட்டில் வைத்து 10 நிமிடம் இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் வெங்காயத்தை சேர்த்து லேசாக பொன்னிறமாக வதக்கி, அரைத்த தக்காளியை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, அதைத் தொடர்ந்து மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து சில நிமிடங்கள் நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து அதில் 3/4 கப் நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதிக்கும் போது, அதில் வடைகளை சேர்த்து 5 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், வடகறி தயார்..