இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் கோதுமையை மறுஏற்றுமதி செய்ய ஐக்கிய அரபு அமீரகம் தடை
இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் கோதுமையை ஏற்றுமதி செய்ய ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது.
சீனாவுக்கு அடுத்தப்படியாக உலகில் கோதுமை அதிகம் உற்பத்தியில் 2வது இடத்தில் இருக்கும் நாடு இந்தியா.
இங்கே இருந்து மத்திய கிழக்கு நாடுகள் உட்பட ஏராளமான நாடுகளுக்கு கோதுமை, கோதுமை மாவு மற்றும் கோதுமை சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
இதனிடையில், இந்தியாவில் எதிர்பார்த்த அளவிற்கு கோதுமை விளைச்சல் இல்லாததால் கடந்த மாதம் 14ம் தேதி கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதற்கு பல நாடுகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தன.

அதேப்போல் ஐக்கிய அரபு அமீரகம், ரஷ்யா மற்றும் இந்தியாவிடமிருந்து கோதுமையை இறக்குமதி செய்து வருகிறது.
எமிரேட்ஸ் கோதுமையை இங்கிருந்து இறக்குமதி செய்து அண்டைய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிலையில், ரஷ்யா- உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் ரஷ்யாவில் இருந்து கோதுமை இறக்குமதி முற்றிலுமாக தடை பட்டது. கோதுமை இறக்குமதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் முழுவதுமாக இந்தியாவை நம்பியிருந்தது.
பின்னர் கோதுமை ஏற்றுமதிக்கு கடந்த மாதம் இந்தியாவும் தடை விதித்ததால், அந்நாட்டிற்கு கோதுமையை இறக்குமதிக்கான அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டன.

பின்னர் ஐக்கிய அரபு அமீரகம் தூதரக வழிகளில் கோதுமையை இறக்குமதி செய்யுமாறு தொடர்ந்து இந்திய அரசிடம் கோரிக்கை வைத்து வந்தது. இருப்பினும் அத்தகைய கோரிக்கையை பரிசீலனை செய்ய மத்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட குழு எந்த முடிவும் எடுக்கவில்லை.
இதனால், இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் கோதுமையை ஏற்றுமதி செய்ய ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளது.
அதாவது இந்தியாவில் இருந்து வரும் கோதுமை, கோதுமை மாவு மற்றும் கோதுமை தொடர்பான பொருட்களின் ஏற்றுமதி மற்றும் மறு ஏற்றுமதியை நான்கு மாதங்களுக்கு (செப்டம்பர் வரை) நிறுத்திவைக்க அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.