101 வயதை மனைவியுடன் கொண்டாடிய விவசாயி: ஊர் மக்கள் திரண்டு ஆசி பெற்ற நெகிழ்ச்சி தருணம்!
நெல்லை: நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே உள்ள மேலச்செவல் தேவர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோபாலசாமி. 101 வயதை எட்டியுள்ள இவர், தனது நீண்ட ஆயுளின் சிறப்பை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார்.
கோபாலசாமியின் மனைவி ராமலட்சுமிக்கு 92 வயது. விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வரும் இந்த தம்பதியினர், திருமண வாழ்க்கையில் பல்வேறு இன்ப, துன்பங்களை கடந்து இன்றுவரையில் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகின்றனர்.

101-வது சதாயுசு விழா
இவர்களுக்கு 7 மகன்கள், 2 மகள்கள், மருமகன்கள், மருமகள்கள், பேரன், பேத்திகள், கொள்ளுப்பேத்திகள் என மொத்தம் 73 பேர் கொண்ட குடும்பம் உள்ளது.
இந்நிலையில், கோபாலசாமியின் 101-வது சதாயுசு விழா நேற்று முன்தினம் மேலச்செவல் ஆதித்தவர்னேஸ்வரர் கோவிலில் இந்து முறைப்படி விமரிசையாக நடைபெற்றுள்ளது.
விழாவில் குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமின்றி ஊர் மக்களும் திரளாக பங்கேற்று மூத்த தம்பதியினரிடம் ஆசி பெற்றனர். தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விருந்து வழங்கப்பட்டது.
101 வயது தாத்தாவின் சதாயுசு விழாவில் மூன்று தலைமுறைகளைச் சேர்ந்த 73 குடும்ப உறுப்பினர்கள் ஒன்றிணைந்தது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விழாவில் மேலச்செவல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டமை குறிப்பி்டத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |