வீடே மணக்கும் கருவாட்டு குழம்பு....கெட்டியா இப்படி வைச்சு சாப்புடுங்கள் அருமையாக இருக்கும்!
வீடே மணக்கும் கருவாடில் குழம்பு வைத்து ருசிப்பது எப்படி என்று இன்று பார்க்கலாம்.
பார்த்தாலே சாப்பிடத்தூண்டும் இந்த குழம்பை வீட்டில் செய்து பாருங்கள்.
தேவையான பொருள்கள்
- வஞ்சீர கருவாடு - 3 துண்டுகள்
- தக்காளி - 1
- பச்சை மிளகாய் -1
- புளி - சிறிய எலுமிச்சை அளவு
- மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
- உப்பு - தேவைக்கேற்ப
- மிளகாய் வத்தல் - 4
- கொத்தமல்லி - 3 மேஜைக்கரண்டி
- மிளகு - 1 தேக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
- பூண்டு பற்கள் - 2
- தேங்காய் துருவல் - 4 மேஜைக்கரண்டி
- சின்ன வெங்காயம் - 10
- நல்லெண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- வெந்தயம் - 1/4 தேக்கரண்டி
- சின்ன வெங்காயம் - 6
- கறிவேப்பிலை - சிறிது
செய்முறை
கருவாடு துண்டுகளை தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும். தக்காளியை பொடிதாகவும், வெங்காயம், பச்சை மிளகாய் இரண்டையும் நீள வாக்கில் நறுக்கி வைக்கவும். புளியை ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து கரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் வெறும் கடாயை வைத்து சூடானதும் மிளகாய் வத்தல், கொத்தமல்லி, மிளகு, சீரகம், பூண்டுப் பற்கள் எல்லாவற்றையும் போட்டு லேசாக வறுத்து எடுத்து சிறிது நேரம் ஆற விடவும்.
ஆறிய பிறகு மிக்ஸ்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும் பிறகு தேங்காய் துருவல், சின்ன வெங்காயம் இரண்டையும் சேர்த்து மிக்ஸ்சியில் தனியாக அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும்.
கடுகு வெடித்தவுடன் வெந்தயம் போடவும். வெந்தயம் சிவந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் புளித் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். புளித்தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அரைத்து வைத்துள்ள மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாடை போகும் வரை கொதிக்க விடவும்.
பச்சை வாடை போனதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்க்கவும்.
தண்ணீர் தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். பச்சை வாடை போகும் வரை கொதிக்க விடவும். பின்னர் கடைசியாக கருவாடை சேர்த்து கருவாடு வேகும் வரை கொதிக்க விடவும்.
உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சிறிது சேர்த்துக் கொள்ளவும். குழம்பு கெட்டியானதும் அடுப்பை அணைக்கவும். சுவையான கருவாட்டு குழம்பு ரெடி.