சிக்கன் பிரியர்களுக்கு சூப்பர் ட்ரீட்! அசத்தலான மசாலா சிக்கன் கிரேவி பண்ணலாமா?
சிக்கன் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவரும் ஒரு பிரியமான உணவு. ஆனால், எப்போதும் ஒரே மாதிரியான சிக்கன் கிரேவி அல்லது வறுவல் செய்து போரடித்துவிட்டதா?
அப்படியானால், இந்த முறை சற்று வித்தியாசமாக காரசாரமான மசாலாவை புதிதாக அரைத்து, மணமும் சுவையும் நிறைந்த அட்டகாசமான சிக்கன் கிரேவியை செய்து பாருங்கள்.

இந்த கிரேவியின் ஒவ்வொரு வாய் சாப்பாட்டிலும் மசாலாவின் நறுமணமும், காரசாரமான சுவையும் நாவை மயக்கும். ஒருமுறை சுவைத்தாலே, மீண்டும் மீண்டும் இதையே செய்ய வேண்டும் என்று தோன்றும் அளவுக்கு இதன் ருசி அசத்தலாக இருக்கும்.
இந்த சுவையான சிக்கன் கிரேவியை வீட்டிலேயே எளிமையாக எப்படி செய்வது என எளிய செய்முறை விளக்கத்துடன் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

தேவையான பொருட்கள்
சிக்கனை ஊற வைக்க
சிக்கன் – 1 கிலோ
தயிர் – 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
மல்லித்தூள் – 3 டேபிள்ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – 1½ டீஸ்பூன்
வறுத்து அரைக்க எண்ணெய் – 1½ டீஸ்பூன்
வரமிளகாய் – 20
காஷ்மீரி வரமிளகாய் – 4
சோம்பு – 1½ டீஸ்பூன்
மிளகு – ¾ டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
தாளிக்க எண்ணெய் – 3 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2 (மெல்லியதாக நறுக்கியது)
கறிவேப்பிலை – 1 கொத்து
உப்பு – ½ டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 2½ டீஸ்பூன்
பெரிய தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3 (நீளவாக்கில் கீறியது)
தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து

செய்முறை
முதலில் சிக்கனை நன்றாகக் கழுவி, அதிலுள்ள தண்ணீரை முழுவதுமாக வடித்துக் கொள்ளுங்கள். அதில் தயிர், மஞ்சள் தூள், மல்லித்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், உப்பு மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்றாகப் பிரட்டி, 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தில் 1½ டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய் மற்றும் காஷ்மீரி வரமிளகாயை சேர்த்து லேசாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு சோம்பு, மிளகு மற்றும் இறுதியாக சீரகம் சேர்த்து நறுமணம் வரும் வரை வறுத்து, ஆறவைத்து நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து வதக்கவும். சிறிதளவு உப்பு சேர்த்தால் வெங்காயம் விரைவாக வதங்கும்.
வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள். அடுத்து தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கி, மூடி வைத்து 2 நிமிடங்கள் மென்மையாக வேக விட வேண்டும்.

தக்காளி நன்றாகக் குழைந்ததும், ஊற வைத்த சிக்கனை சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாகக் கிளறி வதகிய பின்னர் அரைத்த மசாலா மற்றும் கீறிய பச்சை மிளகாயை சேர்த்து நன்றாகக் கலந்து, மிதமான தீயில் மூடி வைத்து 3–4 நிமிடங்கள் சிக்கனில் இருந்து தண்ணீர் வெளியேறும் வரை வேக விட வேண்டும்.
சிக்கனில் இருந்து தண்ணீர் வெளியேறியதும், மூடியைத் திறந்து வைத்து 10–15 நிமிடங்கள் மிதமான தீயில் சுண்டக் கொதிக்க விட்டு, இறுதியாக ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் தேங்காய் எண்ணெயை சூடாக்கி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கிரேவியில் ஊற்ற வேண்டும்.
பின்னர் ஒரு முறை நன்றாகக் கிளறி இறக்கினால், அவ்வளவு தான் மணமும் சுவையும் நிறைந்த காரசாரமான சிக்கன் கிரேவி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |