சமைக்கும் குக்கரில் இருந்து எட்டிப்பார்த்த நல்ல பாம்பு: வைரல் புகைப்படம்
கடலூரில் வீட்டில் சமையல் அறையில் இருந்த குக்கரில் சுமார் 4 அடி நல்ல பாம்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
கடலூர் அடுத்த கம்மியம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாரதி இளமாறன். அவரது வீட்டின் சமையல் அறையில் பாத்திரங்களை அடுக்கி வைத்திருந்த இடத்தில் இருந்து வினோத சத்தம் ஒன்று கேட்டுள்ளது. அது பாம்பு சத்தமாக இருக்கலாம் என எண்ணிய அவரது குடும்பத்தினர் உடனடியாக பாம்பு பிடி வீரரான செல்வா என்பவருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து வந்த பாம்பு பிடி வீரரான செல்வ வீட்டில் வினோதமான சத்தம் வந்த இடத்தை நோக்கிச் சென்றார். பாத்திரங்களுக்கு இடையே இருந்து சத்தம் வந்துள்ளது. வீட்டில் இருந்த சமையல் குக்கரை பார்த்த போது நல்ல பாம்பு ஒன்று தலையை தூக்கி காட்டியது. இதனைக்கண்டு வீட்டில் இருந்தவர்கள் அச்சமடைந்தனர்.
பாம்பு பிடிப்பதில் அனுபவம் கொண்ட செல்வா குக்கரில் இருந்த சுமார் 4 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை லாவகமாக பிடித்து சென்றார். பிடிப்பட்ட பாம்பை பாதுகாப்பாக காப்புக் காட்டில் விட்டார். குக்கரில் நல்ல பாம்பு இருந்த சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.