விபத்தில் உயிரிழந்த சகோதரர்! லாரியில் 600 தட்டுடன் வந்த சீர்வரிசை: நெகிழ வைத்த சகோதரிகள்
விபத்தில் உயிரிழந்த சகோதரரின் ஆசையை சகோதரிகள் பிரமாண்டமாக நிறைவேற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்தில் இறந்த சகோதரர்
திருவாரூர் கீழ வீதியை சேர்ந்தவர் முருகன் (45). இவர் அப்பகுதியில் இலை கடை நடத்தி வந்தார். இந்த சூழலில் 3 வருடங்களுக்கு முன்பு விபத்தில் ஒன்றில் முருகன் உயிரிழந்தார்.
இவருக்கு அட்சய ரத்னா என்ற 13 வயது மகள் உள்ளார். தனது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக செய்ய வேண்டும் என முருகன் ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் எதிர்பாராத விதமாக முருகன் உயிரிழந்துவிடவே அவரது குடும்பத்தார் செய்வதறியாது திகைத்தனர்.
இந்நிலையில் முருகனின் 6 சகோதரிகள், தங்களது சகோதரரின் ஆசையை நிறைவேற்ற முடிவு எடுத்துள்ளனர். அதன்படி, திருவாரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2000 பொதுமக்களுக்கு உணவு வழங்கியுள்ளனர்.


லாரியில் மருமகளுக்கு சீர்வரிசை
மேலும், சுமார் 600 சீர்வரிசை தட்டுகளை திறந்த கண்டெய்னர் லாரியில் ஏற்றி கொண்டு செண்டை மேளம் முழங்க, வானவேடிக்கைகளுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்றுள்ளனர். லாரியில் முன் மறைந்த தங்களது சகோதரர் முருகனின் திருவுருவப் படத்தையும் வைத்தனர்.
இந்த பிரமாண்ட சீர்வரிசை ஊர்வலத்தை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். உயிரிழந்த சகோதரரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக, மருமகளின் மஞ்சள் நீராட்டு விழாவை சிறப்பாக நடத்திய அத்தைகளின் செயல் பலரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
