மீண்டும் அணிக்கு ரோகித் சர்மா திரும்புவது எப்போது? ரசிகர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்!
இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக இருந்த போதிலும் 2 க்கு 1 என்ற கணக்கில் இந்தியா இழந்தது.
இதை தொடர்ந்து இந்த சுற்றுப்பயணத்தில் இரண்டாவதாக நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் இன்று ஜனவரி 19ஆம் தேதி முதல் ஆரம்பித்து இருக்கிறது.
இதனிடையே, தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு முன்பாகவே கேப்டன் விராட்கோலி ஒரு நாள் கேப்டன் பதவி பறிப்போனது. அதைத்தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் விலகுவதாக விராட் கோலி அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில், தென்ஆப்பிரிக்கா சுற்றுப் பயணத்திற்கு தயாராகையில், மும்பையில் பயிற்சி மேற்கொண்டிருந்த ரோகித் சர்மா காயம் அடைந்தார். இந்த காயம் பெரிய அளவில் ஏற்பட்டதால் ஒட்டுமொத்த தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்து அவர் விலகுவதாக பிசிசிஐ அறிவித்தது.
இதனால் தென்ஆப்பிரிக்க ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, காயத்தால் அவதிப்பட்டு வரும் ரோகித் சர்மா எப்போது இந்திய அணிக்கு திரும்புவார் என்ற செய்தி இன்று வெளியாகியுள்ளது.
அதன்படி காயத்தில் இருந்து மீள ரோகித் சர்மா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் முகாமிட்டுள்ளார். கடந்த ஒரு மாதமாகவே அங்கு தங்கி பயிற்சிகளை மேற்கொண்டு வரும் அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியின் புதிய இயக்குனராக பொறுப்பேற்றுள்ள விவிஎஸ் லக்ஷ்மன் மேற்பார்வையில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
மேலும், காயத்தில் இருந்து குணமடைந்து வரும் ரோகித் சர்மா வரும் பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணிக்கு திரும்ப உள்ளார் என தேசிய கிரிக்கெட் அகடமியில் உள்ள முக்கிய பிசிசிஐ நிர்வாகி தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 6 முதல் 12-ம் தேதி வரை வெஸ்ட் இண்டீசை 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் எதிர்கொள்ளும் இந்தியா அணி அதன் பின் வரும் பிப்ரவரி 15 முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ள 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் சந்திக்க உள்ளது.
அந்த தொடரில் ரோகித் சர்மா கேப்டனாக மீண்டும் இந்திய அணியில் இணைய உள்ளதால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.