சஞ்சயை பார்த்து கண்கலங்கினேன் - ரவி மோகன் விவகாரத்தில் சுஜாதா விஜயகுமார் உருக்கம்!
Sujatha Vijayakumar press meet : நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இடையேயான விவாகரத்து விவகாரம் கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களிலும், திரையுலக வட்டாரங்களிலும் அதிகம் பேசப்படும் விஷயமாக இருந்து வருகிறது.
நீதிமன்ற நடவடிக்கைகள், ஜீவனாம்சம் தொடர்பான விவாதம், குழந்தைகளை சந்திக்கும் உரிமை, பாடகி கெனிஷா பிரான்சிஸின் பெயர் அடிக்கடி சர்ச்சையில் இழுக்கப்படுவது என இந்த விவகாரம் நாளுக்கு நாள் புதிய திருப்பங்களை சந்தித்து வருகிறது.

சுஜாதா விஜயகுமார் ஓபன் டாக்
இந்த சூழலில், ஆர்த்தியின் தாயாரும் தயாரிப்பாளருமான சுஜாதா விஜயகுமார் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி இணையத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக அந்த பேட்டியில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சயை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டுப் பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

பேட்டியில் பேசிய சுஜாதா விஜயகுமார், சமீபத்தில் ஜேசன் சஞ்சய் அளித்த ஒரு நேர்காணலை பார்த்ததாக கூறினார். அதில், தனது தந்தையைப் பற்றி சஞ்சய் மிகுந்த மரியாதையுடனும் பெருமையுடனும் பேசிய விதம் தன்னை மிகவும் நெகிழச் செய்ததாகவும், அதைப் பார்த்தபோது கண்கலங்கியதாகவும் தெரிவித்தார்.

"கணவன்–மனைவிக்குள் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும், பிள்ளைகள் தங்கள் தந்தை மீது அன்பும் மரியாதையும் வைத்திருக்க வேண்டும். சஞ்சய் பேசிய விதம் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு," என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து, தனது பேரன்கள் தொடர்பாக சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தையும் சுஜாதா விஜயகுமார் பகிர்ந்துகொண்டார். அவரது குறிப்பிடுகையில், சுமார் 15 நாட்களுக்கு முன்பு தனது பேரன் வெளிநாட்டில் ஒரு கல்வி நிறுவனத்தில் சேர்வதற்காக பாஸ்போர்ட் ஆவணங்களில் ரவி மோகனின் கையெழுத்து தேவைப்பட்டதாக தெரிவித்தார்.

அதற்காக ரவி மோகனை தொடர்புகொண்டபோது, முதலில் வருவதாக கூறியதாகவும், பின்னர் அவரது தொலைபேசியில் இருந்து நீண்ட குறுஞ்செய்தி ஒன்று வந்ததாகவும் அவர் கூறினார். அந்த செய்தியில், "நான் ஏன் உதவ வேண்டும்? நான் என்ன ஏடிஎம் மெஷினா?" என்ற பொருளில் எழுதப்பட்டிருந்ததாகவும், அதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்தார்.
ஆனால், அந்த குறுஞ்செய்தியை நேரடியாக ரவி மோகனே அனுப்பியிருப்பார் என்று தாம் நம்பவில்லை என்றும், அவருடன் இருப்பவர்கள்தான் அதை அனுப்பியிருக்கலாம் என்று தனிப்பட்ட சந்தேகத்தை அவர் வெளிப்படுத்தினார். மேலும், பாடகி கெனிஷா பிரான்சிஸை குறிப்பிட்டும் சுஜாதா விஜயகுமார் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அந்த பெண்ணுடன் தான் இருக்கின்றார்...
அவரது கூற்றுப்படி, கெனிஷா தற்போது கூட ரவி மோகனுடன் இருப்பதாகவும், வெளியில் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்ற தோற்றம் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், குழந்தைகளை சந்திக்கும் சூழலில் ஒரு ஹீலர் உடன் இருக்க வேண்டும் என்று ரவி தரப்பில் கூறப்படுவதாகவும், அப்படிப்பட்ட சூழலில் குழந்தைகள் எப்படி இயல்பாக செல்வார்கள் என்ற கேள்வியையும் எழுப்பினார். குறித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரவி மோகன்–ஆர்த்தி விவகாரத்தில் கெனிஷாவின் பெயர் ஏற்கனவே பலமுறை பேசப்பட்டது. அதற்கு அவர் முன்னதாகவே மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும், ரவி மோகனிடம் இருந்து விலகப் போவதாகவும், ஊடக வெளிச்சத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளதாகவும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், சுஜாதா விஜயகுமார் மீண்டும் கெனிஷா குறித்து கருத்து தெரிவித்திருப்பது சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. அதேபோல், ஜேசன் சஞ்சயை எடுத்துக்காட்டாக குறிப்பிட்ட அவரது பேச்சும் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |