நாவூரும் சுவையில் உருளைக்கிழங்கு வேர்க்கடலை குழம்பு... பண்ணலாமா?
பொதுவாகவே அசைவ பிரியர்களாலும் விரும்பப்படும் சைவ உணவுகளின் பட்டியலில் உருளைக்கிழங்கு முக்கிய இடத்தை பிடிக்கின்றது.
ஆனால் பெரும்பாலானவர்கள் உடல் எடை அதிகரி்க்கும் என்ற பயத்தில் உருளைக்கிழங்கு சாப்பிடுவதையே தற்காலத்தில் தவிர்த்து வருகின்றார்கள்.

ஆனால் அதனை பெரித்து சாப்பிடும் போது மட்டுமே உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
உண்மையில், உருளைக்கிழங்கானது வைட்டமின் 'சி'யின் சிறந்த மூலமாகும். அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் பெரிதும் துணைப்புரிகின்றது.
மேலும் உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, புரதங்கள் மற்றும் அமினோ அமிலங்கள், அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் செரிந்து காணப்படுகின்றது.

அத்துடன் வேர்கடலையை சேர்த்து சாப்பிடும் போது ஆற்றலும், ஆரோக்கிய நன்மைகளும் இரட்டிப்பாகின்றது.
அந்தவைகையில், வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரையில் அனைவராலும் விரும்ப்பபடும் உருளைக்கிழங்கு வேர்க்கடலை காரக்குழம்பை எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை - 1 கப்
உருளைக்கிழங்கு - 2
நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
வெந்தயம் - 1/2 தே.கரண்டி
தாளிப்பு வடகம் - சிறிது
சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)
பூண்டு - 10 பல் (நறுக்கியது)
கறிவேப்பிலை - 1 கொத்து
சின்ன தக்காளி - 2 (நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
சாம்பார் தூள் - 3 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தே.கரண்டி
பெருங்காயத் தூள் - 1/2 தே.கரண்டி
புளி - 1 எலுமிச்சை அளவு (2 கப் நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.)
தேங்காய் விழுது
வெல்லம் - சிறிய துண்டு
தேங்காய் விழுது அரைப்பதற்கு
துருவிய தேங்காய் - 1/2 கப்
கறிவேப்பிலை - சிறிது
சின்ன வெங்காயம் - 1

செய்முறை
முதலில் வேர்க்கடலையை 8 மணி நேரம் நீரில் ஊற வைத்து கொள்ள வேண்டும். பின்னர், ஊற வைத்த வேர்க்கடலையை குக்கரில் சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வேக வைத்து இறக்க வேண்டும்.
ஆறியதும் குக்கரைத் திறந்து, ஒரு பெரிய உருளைக்கிழங்கை இரண்டு துண்டுகளாக வெட்டி அதில் சேர்க்க வேண்டும்.
மீண்டும் குக்கரை மூடி அடுப்பில் வைத்து 1 விசில் வரும் வரை வேக வைத்து இறக்க வேண்டும். பிறகு குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கை ஓரளவு பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
அதனையடுத்து, வேக வைத்த வேர்க்கடலையின் நீரை வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் மற்றும் தாளிப்பு வடகம் சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அடுத்து நறுக்கிய தக்காளியை சேர்த்து, தேவையான அளவு உப்பு, சாம்பார் தூள், மிளகாய் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
அதன் பின்பு வேக வைத்த உருளைக்கிழங்கு மற்றும் வேர்க்கடலையை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். அதன் பின், 2 ½ கப் நீரில் ஊற வைத்த புளியின் புளிச்சாற்றை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

இதற்கிடையில், ஒரு மிக்சர் ஜாரில் துருவிய தேங்காய், கறிவேப்பிலை மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக அரைத்துக் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்த விழுதை குழம்பில் சேர்த்து, மிக்சர் ஜாரில் சிறிதளவு நீர் ஊற்றி அலசி அதையும் குழம்பில் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்னர் ஒரு சிறிய துண்டு வெல்லத்தை சேர்த்து கலந்து, மிதமான தீயில் 10 நிமிடங்கள் வரையில் நன்றாக கொதிக்க விட்டு இறக்கினால் அவ்வளவு தான். அருமையான சுவையில் உருளைக்கிழங்கு வேர்க்கடலை குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |