மருந்து கடைக்கு சென்ற இளைஞரை மடக்கி பிடித்த போலீசார்! பின்பு தலைதெறித்து ஓடிய சம்பவம்
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அதிகரித்த நிலையில், தமிழகத்தில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தளர்வில்லா ஊரடங்கு அமலில் உள்ளதால் அனைத்து மாவட்ட எல்லைகளும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, தேனி மாவட்டத்தில் ஊரடங்கு விதியை மீறுவோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இதற்காக தேனி மாவட்டத்தில் 42 இடங்களில் வாகன தணிக்கை நடந்து வருகிறது.
அந்த வகையில், தேனியில் போலீசார் நேற்று வாகன தணிக்கை செய்த போது, பைக்கில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தபோது, அந்த வாலிபர் தான் மருந்துக்கடைக்கு செல்வதாக கூறினார்.
ஆனால், போலீசார் இதேபோன்று பலர் சொல்லி செல்வதாக கூறி அந்த வாலிபரை தேனி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அதன் பின் சிறிது நேரத்தில் அந்த வாலிபர், தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என்று கூறி அதற்கான சான்றிதழை காண்பித்தார்.
இதனைக்கண்ட போலீசார் அதிர்ச்சியடைந்து விலகி ஓடினர். உடனடியாக அவரிடம் பைக் சாவியை கொடுத்து வண்டியை எடுத்துவிட்டு செல்லுமாறு கூறினர். அந்த வாலிபரும், பைக்கை எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டார்.