போலீஸ் செய்த உதவியால் கையெடுத்து கும்பிட்ட மூதாட்டி! நெகிழ வைத்த வீடியோ
சென்னையில் கொளுத்தும் வெயிலில் வெறும் காலோடு நடந்து வந்த மூதாட்டிக்கு போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் காலணி வாங்கி கொடுத்து சிறிது நேரம் இளைப்பாறுமாறு கூறியது அனைவரையும் நெகிழ வைத்திருக்கிறது.
கொளுத்தும் கோடை வெயில்
தமிழகத்தில் கோடை காலம் அதன் உக்கிரத்தை காட்டத் துவங்கியுள்ளது. சமீப நாட்களாக தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வெப்பநிலை கணிசமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் சென்னையிலும் வெயில் அதன் உக்கிரமான முகத்தை காட்டத் தொடங்கியிருக்கிறது.
இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
அந்த வகையில் சோழிங்கநல்லூர் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தார் அப்பகுதி போக்குவரத்து காவல்துறை அதிகாரியான ஜான்சன் புரூஸ்லீ.

நெகிழ்ந்து போன பொதுமக்கள்
அப்போது அந்த வழியாக மூதாட்டி ஒருவர் வெறும் காலோடு நடந்து வந்திருக்கிறார்.
இதனைக் கண்ட புரூஸ்லீ அவரை கைத்தாங்கலாக பிடித்து நிழலில் அமர வைத்திருக்கிறார். நிழலில் அமர்ந்து ஓய்வெடுத்த அந்த பாட்டியிடம் 20 ரூபாய் கொடுத்து இருக்கிறார் போக்குவரத்து காவல்துறை அதிகாரியான ப்ரூஸ்லீ.
அப்போது மூதாட்டியிடம் பேச்சு கொடுத்திருக்கிறார் ப்ரூஸ்லீ. இதனை அடுத்து அந்த பாட்டி அவரிடம் "வெயில் ரொம்ப அடிக்குது. கால் சூடு தாங்க முடியல" என தெரிவித்திருக்கிறார்.
அவரது நிலைமையை கண்டு அதிர்ச்சியடைந்த ப்ரூஸ்லீ சக காவல்துறை ஒருவரை அனுப்பி காலணி வாங்கி வரச் சொல்லியிருக்கிறார்.
அந்த காலணியை மூதாட்டியிடம் கொடுத்து போட்டுக் கொள்ளுமாறு புரூஸ்லீ சொல்லவும், அதனை இருகரம் கூப்பியவாறு அந்த வயதான பெண்மணி வாங்கிக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து அந்தப் பாட்டியிடம் எந்த உதவி ஆனாலும் தன்னிடம் கேட்கும்படி கூறிய புரூஸ்லீ "இங்கிருக்கும் இரண்டு சிக்னலில் தான் இருப்பேன். ஏதாவது உதவி வேண்டுமானால் என்கிட்ட வாங்க" என்று கூறியுள்ளார்.
அந்த மூதாட்டியும் மிகுந்த கனிவுடன் அங்கிருந்து சென்றார். இதை பார்த்த அங்கிருந்த மக்கள் அனைவரும் நெகிழ்ந்து போயினர்.

மேலும் படிக்க- சந்தோஷத்தில் கண்ணீர் விட்டழுத முதியவர்- ஏன் தெரியுமா?