பிஎப் கணக்கில் இதை உடனே செய்திடுங்க: இல்லை என்றால் ரூ.7 லட்சம் ரூபாய் நஷ்டம் ஆகிடுமாம்
ஓய்வூதிய அமைப்பான ஈபிஎப்ஓ சமீபத்தில் அனைத்து பிஎப் கணக்காளர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் அனைத்து பிஎப் வாடிக்கையாளர்களும் தங்களது ஈபிஎப் கணக்கிற்கு ஈ-நாமினேஷன் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
பிஎப் கணக்கில் இருக்கும் பணம் இந்தக் கொரோனா காலத்தில் பல கோடி பேருக்கு பெரிய அளவில் பயன்பட்டு உள்ளது. ஆனால் அதேவேளையில் பிஎப் கணக்கிற்கு ஈ-நாமினேஷன் செய்யாதவர்களின் குடும்பம் சுமார் 7 லட்சம் ரூபாய் வரையிலான நஷ்டத்தை அடைந்துள்ளனர். எப்படி..? என்பதை தற்போது விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
பிஎப் கணக்கிற்கு ஈ-நாமினேஷன் செய்வது மூலம் EPFO அமைப்பு அளிக்கும் சோசியல் செக்யூரிட்டி பலன்களைப் பிஎப் கணக்கின் உரிமையாளர் விபத்து, அல்லது உடல்நல குறைவு காரணமாக இறக்கும் பட்சத்தில் அவர்களது குடும்பம் இத்திட்டம் மூலம் பலன் பெறும்.
2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஈபிஎப்ஓ அமைப்பு ஊழியர்கள் வைப்புநிதி இணைப்பு இன்சூரன்ஸ் திட்டத்திற்கான (Employees' Deposit Linked Insurance (EDLI)) தொகையை 7 லட்சம் ரூபாய் வரையில் அதிகரித்தது. இந்த EDLI இன்சூரன்ஸ் திட்டம் ஈபிஎப் கணக்கு வைத்துள்ளவர்கள் அனைவருக்கும் உள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் பிஎப் கணக்காளர் இயற்கையாகவோ, விபத்து மற்றும் உடல்நல கோளாறு காரணமாகவோ மரணம் அடைந்தால், ஈ-நாமினேஷன் மூலம் நாமினியாக நியமிக்கப்பட்டவர்களுக்கு 7 லட்சம் ரூபாய் வரையிலான தொகையை இந்த EDLI திட்டம் மூலம் கிடைக்கும்.
EPFO அமைப்புக் கீழ் இருக்கும் அனைத்து நிறுவனமும், Miscellaneous Provisions Act, 1952 கீழ் தானாகவே EDLI திட்டத்திற்குத் தகுதியானவர்களாக அரசு அறிவிக்கிறது. இதன் மூலம் பிஎப் கணக்கு உள்ள அனைவருக்கும் இந்த ஊழியர்கள் வைப்புநிதி இணைப்பு இன்சூரன்ஸ் திட்டத்தைப் பெறுவார்கள்.
இந்நிலையில் பிஎப் கணக்காளர் ஒருவர் இறந்தால் குறைந்தபட்சம் 2.5 லட்சம் ரூபாயும், அதிகப்படியாக 7 லட்சம் ரூபாய் தொகையை EDLI திட்டம் வாயிலாகப் பெறுவார்கள். இது ஜூன் மாதத்திற்கு முன்பு வரை அதிகப்படியாக 6 லட்சம் ரூபாயாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தத் தொகை பெற ஒருவர் குறைந்தது 12 மாதம் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி இருக்க வேண்டும். இல்லையெனில் இந்தத் தொகையைப் பெறுவதற்குத் தகுதி அடையமாட்டார் எனத் தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதேபோல் ESIC (Employee State Insurance Corporation) பதிவு செய்துள்ள கணக்காளர் யாரேனும் கொரோனா தொற்று மூலம் இறந்தால் அவர்களது குடும்பத்திற்கு அதிகப்படியாக 2 வருடம் பென்ஷன் கிடைக்கும். இதற்கும் இந்த ஈ-நாமினி செய்வது கட்டாயம்.
தற்போது வெளியிட்டுள்ள விதிமுறைகள் படி நாமினேட் செய்யப்பட்டவர்களுக்கு ஊழியரின் 90 சதவீதம் சராசரி தினசரி சம்பள தொகையை ஓய்வூதியமாக 2 வருடம் வழங்கப்படும் எனத் தொழிலாளர் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.