நள்ளிரவில் பேத்தியை காணவந்த தாத்தா! ரத்தவெள்ளத்தில் உயிரிழந்த சோகம்
தூத்துக்குடியில் முதியவரை கொடூரமாக வெட்டி படுகொலை செய்த அவரது உறவினர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேத்தியை காண சென்ற முதியவர்
தூத்துக்குடி திரேஸ்புரம் மாதவமாயன் காலனியைச் சேர்ந்தவர் முனியசாமி (70). இவர் மீன்பிடித் தொழில் செய்துவந்தார். இவருக்கு கன்னியம்மாள் என்ற மனைவியும், இரு மகன் மற்றும் இருமகள்கள் உள்ளனர். இவரது பேத்தி முத்துமாலை(20) என்பவருக்கும், திரேஸ்புரத்தைச் சேர்ந்த மாரி(24) என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாட்டால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இவர்களின் இரு குடும்பத்திற்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இந்நிலையில் முனியசாமி, தனது பேத்தி முத்துமாலையைப் பார்க்க நேற்று இரவு அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.
சரமாரியாக வெட்டி கொலை
அவரைப் பார்த்ததும், ஆத்திரம் அடைந்த மாரியின் சகோதரர்கள் உள்ளிட்ட 3 பேர் சேர்ந்து முனியசாமியை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த முனுசாமி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இதனையடுத்து, அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முனியசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர்.