ஆக்சிஜன் படுக்கையை விட்டுக்கொடுத்த பெண்! கல்யாண நாளில் உயிரிழந்த பரிதாபம்
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்த செவிலியர் ஒருவர், தன்னுடைய படுக்கையை வேறொருவருக்கு விட்டுக் கொடுத்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
காஞ்சிபுரம் பருத்திகுளம் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன், இவரது மனைவி பவானி(வயது 52). சென்னை பெருநகரம், ஒன்பதாவது மண்டலத்தில் பெருநகர துணை மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த மாதம் 22ம் தேதி இவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஓரளவு குணமானதும் 26ம் தேதி வீட்டுக்கு சென்றுவிட்டார். வீட்டில் தனிமைப்படுத்தி கொண்ட அவருக்கு, மூச்சுத்திணறல் ஏற்பட்டு, 28ம் தேதி மீண்டும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த பவானிக்கு ஓரளவு குணமானது, எனவே பல நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்படுவதை உணர்ந்த பவானி, தன்னுடைய படுக்கையை வேறொருவருக்கு விட்டுக்கொடுத்தார்.
தொடர்ந்து கடந்த 12ம் தேதி டிஸ்ஜார்ஜ் ஆகி வீட்டுக்கு சென்ற பவானி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார், திருமண நாளிலேயே உயிரிழந்ததால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.