இந்தியாவின் பானி பூரி தலைநகரம் எது தெரியுமா?
Mumbai city selling 15-25 lakhs pani puri daily: இந்தியாவின் பானி பூரி தலைநகரமாக மகாராஷ்டிராவின் மும்பை உருவெடுத்துள்ளது.
தினமும் 15 முதல் 25 இலட்சம் தட்டுகளை விற்பனை செய்து மகாராஷ்டிராவின் மும்பை, இந்தியாவின் பானி பூரி தலைநகரமாக உருவெடுத்துள்ளது.
பானி பூரி
இந்தியாவின் மிகவும் பிரபலமான உணவாக உருவெடுத்துள்ளது பானி பூரி. இதற்கு முக்கிய காரணம் தெருக்களில் சாதாரணமாக, மிகக்குறைந்த விலையில் கிடைப்பதே ஆகும்.

மேலும் காரமான நீர், கசப்பான சட்னிகள் மற்றும் சுவையான நிரப்புதல்கள் இதன் சிறப்பாக இருப்பதால், நாடு முழுவதும் மிகவும் பிடித்தமான உணவாக பானி பூரி இருக்கிறது.
பொதுவாக, மொறுமொறுப்பான மற்றும் உள்ளே காலியாக உள்ள பூரிகளில், மசித்த அல்லது வேகவைத்த உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, வெங்காயம் மற்றும் சட்னி ஆகியவற்றை நிரப்பி பானி பூரி தயாரிக்கப்படுகிறது.
பின்னர் புதினா, கொத்தமல்லி, புளி, கருப்பு உப்பு மற்றும் மசாலா கலவை போன்ற பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் சுவையூட்டப்பட்ட நீர் அந்தப் பூரிகளில் நிரப்பப்படுகிறது.
பிரபலமாக உள்ள இந்த சிற்றுண்டி இந்தியா முழுவதும் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. டெல்லி, வட இந்தியாவின் பல பகுதிகளில் இது பொதுவாக 'கோல்கப்பா' என்றும், மேற்கு வங்காளத்தில் 'புச்கா' என்று அறியப்படுகிறது.
ஒடிசா மற்றும் சத்தீஸ்கரில் இது பெரும்பாலும் 'குப்சப்' என்றும், சில வடக்குப் பகுதிகளில் 'பானி கே பதஷே' என்றும் பானி பூரி அழைக்கப்படுகிறது.
மும்பை நகரம்
இந்திய அளவில் பானி பூரி அதிக விற்பனை செய்யப்படும் நகரமாக இருப்பது மகாராஷ்டிராவின் மும்பை என தெரிய வந்துள்ளது.
உணவுத் துறை அறிக்கைகள் மற்றும் சந்தை பகுப்பாய்வுகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள மதிப்பீடுகளின்படி, மும்பை நகரத்தில் தினமும் 15 இலட்சம் முதல் 25 இலட்சம் தட்டுகள் வரை பானி பூரி விற்கப்படலாம்.
இதன்மூலம் டெல்லி, கொல்கத்தா நகரங்களை முந்தி பானி பூரி நுகர்வுக்கான நாட்டின் மிகப்பெரிய மையங்களில் ஒன்றாக மும்பை கருதப்படுகிறது.
மும்பையின் பெருமளவிலான மக்கள்தொகை, வேகமான வாழ்க்கை முறை மற்றும் செழிப்பான தெருவோர உணவு கலாச்சாரம் ஆகியவை விரைவாகவும், மலிவாகவும் கிடைக்கக்கூடிய சிற்றுண்டிகளை நாட செய்வதனால், முதன்மையான தேர்வாக பானி பூரி உள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தைகள், இரயில் நிலையங்கள், கடற்கரைகள், வணிகப் பகுதிகள், உணவு வீதிகள், வணிக வளாகங்கள் மற்றும் உணவுக்கூடங்கள் என எங்கும் பானி பூரி கடைகளைக் காண முடியும்.
