சாதம் மீந்து போய்விட்டதா? மொறு மொறு வடகம் செய்யலாம்
இனி உங்கள் வீட்டில் வடகம் செய்ய நீங்கள் ரொம்ப சிரமப்பட தேவையில்லை. வீட்டில் மீந்த சாதத்தை வைத்தே எளிதாக மொறு மொறு வடகம் தயாரித்துவிடலாம்...
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு சைடு டிஷ் தான் வடகம். இதை நாம் சைவம், அசைவம் என அனைத்து குழம்புகளுடனும் சேர்த்து சாப்பிடலாம். ஏன் ஒருசிலர் ஸ்நாக்ஸாக கூட இதை சாப்பிடுவார்கள்.
பொதுவாக பெரும்பாலான வீடுகளில் கடைகளில் இருந்துதான் வடகம் வாங்குவது வழக்கம். ஆனால் சிலர் தங்களது வீடுகளிலேயே வடகம் செய்துவிடுவார்கள். இது கொஞ்சம் சிரமமான வேலைதான்.
ஆனால் இனி உங்கள் வீட்டில் வடகம் செய்ய நீங்கள் ரொம்ப சிரமப்பட தேவையில்லை. வீட்டில் மீந்த சாதத்தை வைத்தே எளிதாக மொறு மொறு வடகம் தயாரித்துவிடலாம். இதற்கு உங்கள் வீட்டில் உள்ள இந்த 4 பொருட்களே போதும். வாங்க எப்படி செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
சாதம்
உப்பு - சுவைக்கேற்ப
சீரகம் - தேவைக்கேற்ப
சிகப்பு மிளகாய் தூள் - காரத்திற்கேற்ப
எண்ணெய் - சிறிதளவு

செய்முறை
தண்ணீர் ஊற்றி வைத்துள்ள முதல் நாள் மீந்த சாதத்தை நன்றாக பிழிந்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் சீரகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.
அடுத்து அதில் உங்கள் காரத்திற்கு ஏற்ப சிகப்பு மிளகாய் பொடியை சேர்த்து அனைத்தையும் நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.
பிறகு ஒரு தட்டில் நன்றாக எண்ணெய்யை தடவி அதில் பிசைந்து வைத்துள்ள சாதத்தை தேவையான அளவிற்கு சிறிது சிறிதாக கிள்ளி போட்டு கொள்ளுங்கள்.
பிறகு இதை நன்றாக வெயிலில் காயவைத்தால் வடகம் தயாராகிவிடும். வடகம் நன்கு காய்ந்தவுடன் எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்து நீண்ட நாட்களுக்கு வறுத்து சாப்பிடலாம்.
உங்களுக்கு தேவையான போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இந்த வடகத்தை போட்டு பொரித்து சாப்பிட்டால் மொறு மொறுவென்று சுவையாக இருக்கும்.