தாம்பத்திய குறைபாடு முதல் எடை குறைப்பு வரை! கடுக்காய் இருக்க பயம் ஏன்?
‘காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்’ என உடல் நலத்திற்கு இலக்கணம் வகுத்திருக்கிறார்கள் முன்னோர்கள்.
`தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்துக்கு ஒப்பானது’ கடுக்காய் என்கிறார் திருமூலர்.
வயோதிக பருவத்தில் ஏற்படும் உடல் உள்ளுறுப்புகள் சிதைவை தடுக்கக்கூடிய அதிகளவு ஆன்டி ஆக்சிடன்ட் தன்மை கொண்ட மூலிகை கடுக்காய்.
தமிழர்கள் வகுத்த அறுசுவைகளுள், உப்பு சுவை நீங்கலாக மற்ற ஐந்து சுவைகளும் உடையதும் கடுக்காய்.
இப்படி இதன் மருத்துவ பலன்களை அடுக்கிக் கொண்டே போகலாம்! இதை எப்படி பயன்படுத்த வேண்டும்? எந்நேரத்தில் சாப்பிட வேண்டும், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற பல கேள்விகளுக்கு விடையாகிறது இந்த கட்டுரை.
கடுக்காயின் வகைகள்
கடுக்காயில் பலவகைகள் உண்டு, அதில் பிஞ்சுக் கடுக்காய் மலச்சிக்கலைப் போக்கும். மலத்தை இளக்கும்; உடலுக்கு அழகூட்டி, மெருகூட்டும்.
செங்கடுக்காய் காசநோயைப் (டி.பி) போக்கி மெலிந்த உடலைத் தேற்றி அழகாக்கும்.
வரிக்கடுக்காய் பல்வேறு நோய்களை விரட்டும்; விந்தணுக்களை அதிகரிக்கச் செய்யும்.
மருத்துவ பலன்கள்
சளியை குறைப்பதுடன், மலச்சிக்கலைப் போக்கி குடல் சக்தியை அதிகப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு.
மிக முக்கியமாக இரத்தத்தைச் சுத்தப்படுத்துவதுடன், வாத, பித்த, கபம் ஆகியவற்றால் வரும் பல்வேறு நோய்களையும் சரிசெய்கிறது.
டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதம் என்றால் அது கடுக்காய் தான், இரவில் தினமும் கடுக்காய் சூரணத்தை சாப்பிட்டு வந்தால் இன்சுலின் உற்பத்தியை அதிகப்படுத்தி சர்க்கரை நோயை குறைக்கிறது.
இதுதவிர நாள்பட்ட சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் சிறு மற்றும் பெரு ரத்தக்குழாய்களில் ஏற்படும் பாதிப்புகளையும் சரிசெய்கிறது.
எப்படி சாப்பிட வேண்டும்?
அதிகநேரம் கணனி முன்பு உட்கார்ந்தே வேலை செய்வதால், ஆண்மை குறைவு பிரச்சனை வருவதாக சொல்கிறார்கள், இதனால் குழந்தை பேறு கிடைப்பது சிக்கலாகிறது, இவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி கல்பம், மதிய உணவுக்கு பிறகு சுக்கு கல்பம், இரவில் கடுக்காய் கல்பம் என தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் குழந்தை பேறு கிடைக்கும்.
மண்சட்டியில் கடுக்காய்த்தூளுடன் சிறிதளவு பெருஞ்சீரகம் சேர்த்து தண்ணீர்விட்டு நன்றாகக் காய்ச்சி, வடிகட்ட வேண்டும். அதனுடன் சுத்தமான தேன் கலந்து தினமும் இரண்டு வேளை குடித்துவந்தால் உடல் எடை குறையும்.
மூன்று கடுக்காய்த் தோல்களுடன் தேவையான அளவு இஞ்சி, மிளகாய், புளி, உளுந்து சேர்த்து நெய்யில் வதக்கி உப்பு சேர்த்து துவையலாக அரைக்கவும். இதைச் சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டுவந்தால் செரிமான சக்தி அதிகரிப்பதுடன், உடல் பலம் பெறும்.
கடுக்காய் பொடி தயார் செய்வது எப்படி?
கடுக்காயை வாங்கி, அதை உடைத்து கடினமான தோல் பகுதியை மட்டும் நாம் எடுத்துக் கொள்ளவேண்டும்.
தோல் பகுதி மட்டுமே உணவாகவோ, மருந்தாகவோ எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய பகுதி.
உள்ளே இருக்கும் கடுக்காய் கொட்டை விஷத்தன்மை உடையது என்பதால், எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக் கூடாது.
பிரித்தெடுத்த கடுக்காய் தோடு பகுதியை சிறு துண்டுகளாக்கி, மிக்சியில் போட்டு அரைத்து எடுத்தால், பழுப்பும் மஞ்சளுமான கடுக்காய் பவுடர் கிடைக்கும்.
கடுக்காய் கல்பம் என்பது என்ன?
பாலில் கடுக்காயைப் போட்டு, அடுப்பில் வைத்து கால் மணி நேரம் காய்ச்சவும். சூடு ஆறியதும் இறக்கி, கடுக்காயை மட்டும் வெயிலில் உலரவைக்கவும்.
மூன்று நாள்கள் உலரவைத்த பிறகு, இதை விதையுடன் மிக்ஸியில் அரைத்து, கண்ணாடி பாட்டிலில் எடுத்துவைக்கவும்.
கடுக்காயின் விதை நச்சு என்றாலும், அதைப் பால் ஊற்றிக் காய்ச்சியதன் மூலம் நச்சு விலகி, கல்பமாகிவிடும்.
இந்தக் கடுக்காய் கல்பத்தை ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து, இரவு உணவுக்குப் பின்னர் அருந்தலாம்.
மற்ற கல்பங்களைப்போல அல்லாமல் கடுக்காய் கல்பத்தை மட்டும் பல ஆண்டுகளுக்குச் சாப்பிடலாம் என்பது முக்கிய தகவல்.
கடுக்காய் தீமைகள்
சிலருக்கு வயிற்றுப்போக்கு, நீரிழப்பு, காய்ச்சல், ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு பல்வேறு கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் மருத்துவரை கலந்து ஆலோசித்து விட்டு சாப்பிடலாம்.
இரத்த சர்க்கரையை குறைக்கும் என்பதால், ஏற்கனவே இதற்காக மருந்து எடுத்துக் கொள்பவர்களும் மருத்துவரை கேட்டுக் கொள்வது நல்லது.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் இதை எடுப்பதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையின்றி பயன்படுத்த வேண்டாம்.
ஏற்கனவே செரிமானம் குறைவாக இருக்கும் நபர்களும் அளவோடு மட்டுமே பயன்படுத்த வேண்டும்!!!