காபூலில் குண்டுவெடிப்பு: 90 பேர் பலி! தாலிபான்களால் பதற்றத்தில் மக்கள்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கு அதிரடியாக இறங்கிய அமெரிக்க படை அங்குள்ள அமெரிக்கர்களை மீட்டு வருகிறது.
அதேபோல் இந்தியர்களும் இதுவரை 300ற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு தாயகம் அழைத்து வரப்பட்டனர். அத்துடன் அந்நாட்டில் இருந்து வெளியேற காபூலில் உள்ள விமான நிலையத்தில் ஆப்கானியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த சூழலில் காபூலில் உள்ள விமான நிலையம் அருகே ஒரு வெடிகுண்டும், அருகில் உள்ள ஹோட்டலில் மற்றொரு குண்டும் வெடித்தது. இதில் பல உயிர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இந்தியா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் காபூல் இரட்டை குண்டுவெடிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது, இதில் 13 அமெரிக்க படையினர் உயிரிழந்துள்ளனர்.
காபூல் குண்டுவெடிப்பு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ”காபூல் குண்டுவெடிப்பை மறக்கமாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம்; அதற்கான விலையை சம்பந்தப்பட்டவர்கள் கொடுத்தே ஆக வேண்டும், தேடிவந்து வேட்டையாடுவோம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

